Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts

Monday, July 14, 2008

தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியா?

நேற்று கோவையில் வலைப்பதிவர் சந்திப்பு மிட்டாய், வடை, குலாப் ஜாமூன், சாப்பாடு, மஞ்சூர் ராஜாவின் அன்பு, மஞ்சூர் ராஜா அவர்களது மனைவி, மற்றும் உறவினர்களின் வார்த்தையில் விவரிக்க முடியாத விருந்தோம்பல், சில லட்சியவாதிப் பதிவர்கள் மற்றும் என் போன்ற சில மொக்கைப் பதிவர்கள் ஆகியோரால் சிறப்புற நடைபெற்றது.


சந்திப்பில் ஞானவெட்டியான் என்ற பதிவரது லட்சியத்தைக் கேட்டபோது பிரமிப்பாய் இருந்தது. “இன்னும் வாழும் காலத்திற்குள்ளாக, வெளிவராத பல நூல்கள் குறித்து எழுதியே தீருவேன்” என்றார். அவரது அந்த லட்சியத்தைக் கேட்டு மெய்றந்து, பேச்சற்றுப் போயிருந்தோம் நாங்கள்.



நான் சந்தித்து அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும், அவரைப் பற்றி இன்னும் கேட்டுக் கொள்ள வேண்டும், அவரது நட்பு வேண்டும் என்று ஒருவரை நினைத்திருந்தேன். அவர் பேசியபோது நடுவே ஒன்று சொன்னார். “நான் தமிழ்மணத்துல எழுதறத விட்டுட்டேன். நான் எழுதறத நிறுத்தினதுக்கப்புறம் தமிழ்மணம் வெறும் மொக்கைப் பதிவுகளின் திரட்டியாகிவிட்டது” என்றும் “நானும் (இன்னொரு நண்பரைச் சுட்டிக் காட்டி) அவரும் பொது மக்கள் பிரச்சினையை எழுதறோம். ஜ்யோவ்ராம் சுந்தர் மாதிரி எங்களுக்கும் திடீர்ன்னு மட்டுறுத்தல் வந்ததுன்னா என்ன பண்றது?” என்றும் ஆதங்கப்பட்டார்.



மிகவும் வருத்தமாக இருந்தது, அவர் எழுதியதை நிறுத்தியது. இன்ஃபாக்ட், அதைப் பற்றி கேட்கவே நினைத்திருந்தேன், ஆனால் “இப்பல்லாம் வெறும் மொக்கைப் பதிவுதான் போடறாங்க” என்ற அவரது வார்த்தைகள் புதிதாக வலையில் எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.



அங்கேயே, அவருக்கு முன் பேசிய லதானந்த் அங்கிள் சொன்னார். “எனக்கு தமிழை தூக்கி நிறுத்த வேண்டி எழுத வர்ல. திருப்பூர்லயெல்லாம் பார்த்தா இரவு, பகல் இல்லாத இயந்திர வாழ்க்கை. வெளிநாடுகள்ல இருக்கற பல தமிழர்களுக்கு ஏதோ கொஞ்ச நேர ரிலாக்ஸேஷனுக்காக நெட்ல வர்றாங்க.. அவங்கள மாதிரியானவிங்களுக்கு கொஞ்ச நேரம் சந்தோஷத்தை தர்றதுக்காக மட்டும்தான் நான் எழுதறேன்” ன்னார். சபாஷ் அங்கிள்!


நான் அங்கிருந்து ஒரு மரண விசாரிப்புக்குப் போக வேண்டியிருந்ததால், இந்த மொக்கைப் பதிவுகள் விசாரிப்பை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று ‘ஓசை’யில்லாமல் இருந்துவிட்டேன். அது மட்டுமின்றி, என் எழுத்துக்களை வைத்து என்னை எதிர்பார்ப்பவர்களுக்கு (யாரு உன்னை எதிர்பார்த்தாங்க?) என் உருவம் பார்த்தால் மதிக்கவே தோன்றாது. லதானந்த் அங்கிள் மாதிரி பார்த்தாலே சல்யூட் அடிக்கத் தோன்றும் உருவமோ, ஞானவெட்டியான், வாத்தியார் சுப்பையா மாதிரி ‘வணக்கம் சார்’ சொல்லத்தோன்றுகிற உருவமோ எனக்கில்லை. என்னைவிட வய்து குறைந்தவர்கள் என்னிடம் ‘அது வந்து தம்பி..’ என்று பேச ஆரம்பிக்கும்போதும் நான் அமைதியாக கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறேன். `யோவ்.. எனக்கு 35 வயசாச்சு. கல்யாணமாகி பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு. ரெண்டு பொண்ணு இருக்கு. நான் 1991-லயே இந்த எழுத்து உலகத்துல..” என்றெல்லாம் ஜல்லியடித்து என்ன ஆகப் போகிறது என்று பேசாமல் இருந்துவிடுவேன். அதுவுமில்லாமல் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். எதுவும் தெரியாதவனாகவே இன்னும் இருக்கிறேன்.


எது மொக்கைப் பதிவு என்று யாருக்குமே ஒரு தெளிவான கருத்து இல்லை. என்னைப் பொறுத்தவரை ‘தனிமனித ஒழுக்கமே ஒரு சமூகத்தை உயர்த்தும்’ என்பதில் தீராத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். ஆனால் என் கருத்துகளை நீயும் கடைபிடி” என்று யாருக்கும் போதிக்க எனக்கு தகுதி இருப்பதாக நான் கருதவே இல்லை. ஆகவே என் எழுத்துகளும் அதை ரொம்ப சீரியாஸாக உங்களுக்கு போதிக்காது. என் நோக்கமெல்லாம் எழுதும் நேரத்தில்
எனக்கிருக்கும் மகிழ்ச்சி, அதைப் படிக்கும் நேரத்தில் உங்களையும் தொற்றிக்கொள்ள வேண்டுமென்பது மட்டுமே. இந்த ஒரே காரணத்தினால்தான் என் பதிவுகளில் நான் உங்களுக்கு சொல்ல நினைக்கிற பல விஷயங்களை நகைச்சுவை கலந்து, தேன் தடவி சொல்கிறேன். ”நான் இப்படி பண்ணி எனக்கு இந்த அனுபவம் கிடைச்சது, நீ என்ன பண்ணனும்ன்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்பதே என் பாணி.


அதற்காக எல்லாப் பதிவையும் போதிக்கும் பதிவாக, சமூக நன்மைக்காக எழுதும் திராணியற்ற முதுகெலும்பில்லாத பதிவன் தான் நான். நீங்கள் அப்படி எழுதும் பதிவர், மொக்கைப் பதிவுகளுக்கு எதிரி என்பதில் மிகவும் அகமகிழ்கிறேன். உங்களுக்கு என் நமஸ்காரங்கள். ஆனால், உங்களைப் போன்றவர் எழுதாமல் விடுவதுதான் என் போன்ற மூன்றாம்தர மொக்கைப் பதிவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது!! இல்லையென்றால் எவனெவன் என்னைப் போல மொக்கைப் பதிவுகளை எழுகிறானோ, அவனுக்கெல்லாம்
போய் பின்னூட்டம் போட்டு `இப்படி எழுதாதே,, இப்படி எழுது’ என்று அறிவுறுத்தி அவனை செழுமைப் படுத்தி, தமிழ்மணத்துக்கு உதவலாமே? என்ன இருந்தாலும் அதுவும் ஒரு பொதுப் பிரச்சினைதானே? எங்களுக்கெல்லாம் வழிகாட்டுவதும் உங்களின் கடமைதானே?


இப்பொழுதுகூட, ஞானவெட்டியான் சொன்ன அரிய தகவல்கள் குறித்தோ, ஜோசப் பால்ராஜும், இந்த மொக்கைப் பதிவு குறித்து ஆதங்கப்பட்ட நண்பரும் அருமையாக விளக்கிய கணினித் தொழில்நுட்பம் குறித்தோ பதிவைப் போடாமல் தேவையில்லாமல் அவர் சொன்ன ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு பதிவாய்ப் போடும் கீழாந்தர மூளைதான் எனக்கிருக்கிறது!!


”அவர் சொன்னது உன்னைப் பற்றி என்று நினைத்து ஏன் டென்ஷனாகற” என்று கேட்பவர்களுக்கு..


யாரைப் பற்றி என்றாலும் கேட்கணுமில்லையா? இதுவும் ஒரு பொதுப் பிரச்சினைதானே?