Showing posts with label எழுத்து. Show all posts
Showing posts with label எழுத்து. Show all posts

Friday, August 29, 2008

எழுதுங்க... எழுதுங்க.... எழுதிகிட்டே இருங்க!

“நல்ல பதிவர் தான். என்ன பதிவுகள் கொஞ்சம் அதிகம்..” நீங்கள் வலைப்பூ திறக்கும்போது பதிவுலகத்தில் விசாரிக்கும்போது இதுபோல எந்தப் பதிவரைப் பற்றியாவது சொல்லியிருப்பார்கள். வலைப்பூ இருப்பது பெரிய குற்றமில்லை தான். அப்படியென்றால் அதிக பதிவெழுதுவது மட்டும் அவ்வளவு பெரிய குற்றமா என்ன?

தமிழ்மணத்தில் எழுதிய லக்கிலுக்குக்கு வாயே இல்லாமல் தானிருந்தது. தமிழ்மணம் என்ன சொன்னாலும் அதை கேட்டு நடந்த பதிவர் தெய்வமாக லக்கிலுக் வாழ்ந்து வந்தார். பலரது தலைப்பை மட்டுறுத்திய தமிழ்மணத்தை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியதில்லை. . கடைசி வரைக்கும் லக்கிலுக் அப்படியே இருந்திருந்தால் அவரை இன்று பதிவர் தலைவனாக கொண்டாடியிருப்போமா என்ன?

காட்டமாக “தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு அவசரக் கடிதம்” என்று எழுதியதால் தானே தமிழ்மணத்துக்கு நீதி வழுவியது புரிந்தது? லக்கிக்கும், அவரது ஜட்டிக்கும் (தலைப்புங்க...) தமிழ்மணத்தில் இடம் கிடைத்தது? இதனால் அறியப்படும் நீதி என்னவென்றால் தேவையான இடத்தில் தேவையான விஷயத்தை எழுதியே தீரவேண்டும். எழுதாதவர்கள் தோல்வி அடைகிறார்கள். தேவையற்றதை எழுதுபவர்களும் படுதோல்வி அடைகிறார்கள்.

எழுதாவிட்டாலும் தோல்வி, அதிகமாக எழுதினாலும் தோல்வி! என்னதான் செய்வது என்கிறீர்களா? எழுதுங்கள், இதைப்பற்றி நாலு பதிவு எழுதுங்கள். நாலு பேர் பின்னூட்டத்தை கண்கொடுத்துப் பாருங்கள். எழுதுவதற்கு தான் கையும், படிப்பதற்கு தான் கண்ணும் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எதை எங்கே எழுதவேண்டும்? எப்படி எழுத வேண்டும்? ஏன் எழுதவேண்டும்? என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். மகிழ்ச்சி, வெற்றி, குதூகலம், அன்பு, காதல், கத்தரிக்காய், இத்யாதி.. இத்யாதி எல்லாமே உங்களை தேடிவரும். நீங்கள் தேடி அலையவேண்டியதில்லை.


எழுதுவது தான் பல பேருக்கே தொழில் தெரியுமா?

வாத்தியார் சுப்பையா எழுதாவிட்டால் பல்சுவையை இழுத்து மூடிவிட்டு போய்விடலாம். டாக்டர் புரூனோ எழுதாவிட்டால் அவரது வாசகர்கள் கதி அதோகதிதான். லக்கிலுக் எழுதாவிட்டால் யார் தலைவனாக இருப்பது? கோவி.கண்ணன் எதிவினைப் பதிவுபோடாமல், பதிவர் சந்திப்பு நடத்தாமல் காலத்தைக் கடத்தினால் உங்கள் மண்டை வெடித்துவிடும். அதிஷா, ச்சின்னப்பையன், ஆயில்யன், மங்களூர் சிவா, நாமக்கல் சிபி, வெண்பூ, எம்.எம்.அப்துல்லா, வால்பையன், முத்துலெட்சுமி கயல்விழி, தாமிரா, வடகரை வேலன், மைஃப்ரெண்ட் இவர்கள் எழுதுவதை நீங்களோ, நீங்கள் எழுதுவதை அவர்களோ படிக்காமல் ஏதாவது ஆக வாய்ப்பிருக்கிறதா? அதுவும் குசும்பன் கமெண்ட் பதிவு போடாவிட்டால் வேதாளத்துக்கு பதில் சொல்லாவிட்டால் விக்கிரமாதித்தனின் தலை சுக்குநூறாக வெடித்து விடுமே? அதுபோல அவரது வாசகர்களுக்கு தலை வெடித்துவிடுமாம் தெரியுமா?

முன்பெல்லாம் மளிகை லிஸ்ட், காய்கறி லிஸ்ட் என்று எழுதுவார்களாம் இல்லத்தரசிகள், இப்போதெல்லாம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்துகொண்டு சமையல் குறிப்புகளை எழுதிக் கொண்டே போகிறார்கள்!

வலைப்பூ வந்தாலும் வந்தது. எல்லோரும், எப்போதும், எதையாவது எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள். நின்றால் பதிவு, நடந்தால் பதிவு, படுத்தால் பதிவு. நாமெல்லாம் எழுதிக்கொண்டேயிருப்பதால் தான் பல திரட்டிகள் பதிவுகளாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். பெட்ரோல் விலையேற்றம், சேதுசமுத்திர திட்டம் என்று எந்தப் பிரச்சினையை எடுத்தாலும் அரசியல் கட்சிகள் நாடுதழுவிய பந்த் நடத்துகிறார்கள். ஒரே ஒருநாள் யாரும் எந்தப் பதிவும் எழுதமாட்டோம் என்று பதிவர்களாக சேர்ந்து பந்த் நடத்தினால் என்னவாகும்? கட்சிகள் நடத்தும் நாடுதழுவிய பந்தை விட கூடுதல் கவன ஈர்ப்பை பெறும் அல்லவா?


பதிவு என்றாலே நம்ம ஆட்களுக்கு பொண்டாட்டி தான் நினைவுக்கு வருகிறார்கள். பொண்டாட்டிகள் ஒரு கருத்து வங்கி. எதைப் பற்றி பேசினாலும் நாலு, ஐந்து பக்கத்துக்கு கருத்து சொல்வார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை என்று தோன்றும். ஆனாலும் தெரியாத விஷயத்தையும், தெரிந்தது போல பேசுவதுதான் பொண்டாட்டிகள் வேலை. காலையில் அலுவலக நேரத்தில் பார்க்கலாம், பைக் பில்லியன்களில் உட்கார்ந்துகொண்டே பேசிக்கொண்டே இருப்பார்கள். மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ தெரியாது. லக்கிலுக்கின் நண்பர் ஒருவரின் மனைவி இதுபோல ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கை. அப்படி என்னதான்யா உன் பொண்டாட்டி உங்கிட்டே ஓயாம பேசுது என்று ஒருநாள் அவர் கேட்டார். அவ என்ன பேசுறான்னு எனக்கெப்படி தெரியும்? ஹெல்மெட்டுக்குள்ள நைசா ஹியர் போனை மாட்டிட்டு நான் எஃப்.எம்.முல்லே கேட்டுக்கிட்டிருக்கேன் என்று பதிலளித்தார். அதையும் தன் பதிவில் எழுதிவிட்டார் லக்கி! இப்படி நண்பர்கள் பேசுவதும், சணடையிடுவதும் எல்லாமே பதிவுதான் பதிவர்களுக்கு!


காலையில் ரெண்டு பேனாவை எடுத்து சட்டைப்பையில் போட்டுக்கொண்டு நாள் முழுவதும் எழுதாவிரதம் கூட இருந்துவிடலாம். இப்பொதெல்லாம் எழுதும் விரதமும் இருக்க ஆரம்பித்து விட்டார்கள். எழுதாமல் இருப்பது தான் இன்றைய காலக்கட்டத்தில் சாத்தியமில்லாததும், மிகக்கடுமையானதாகவும் இருக்கக்கூடும். உரிமைகளை கேட்கவும், உணர்வுகளை சொல்லவும், உறவாடவும், நட்பினை கொண்டாடவும், மகிழ்ச்சியை – சோகத்தை பகிர்ந்துக் கொள்ளவும், எதற்கெடுத்தாலும், எல்லாவற்றுக்கும் நாம் எழுதவேண்டியது அவசியமாகிறது. வாள்முனையைவிட பேனாமுனை வலிமையானது என்று சும்மாவா சொன்னார்கள்?

எழுதுவதென்றால் வெட்டியாக கீபேட் உடைய, கை வலிக்க எவ்வளவோ எழுதிக்கொண்டேயிருக்கலாம். ஆனால் உருப்படியாக, உபயோகமாக, வலைநாகரிகமறிந்து, சரியான சந்தர்ப்பத்தில், சரியான இடத்தில், சரியானவர்களிடம் சரியாக எழுதுவது எப்படி? இதைத்தான் யாராவது எழுதுவார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். எழுதி, எழுதி எனக்கு கை வலிக்கிறது, யாராவது கொஞ்சநேரம் எதையாவது பின்னூட்டமாய் எழுதுங்களேன்!!


டிஸ்கி 1: லக்கிலுக் நேற்று எழுதிய பதிவின் எதிர்வினைப் பதிவு இது.

டிஸ்கி 2: வேறு நல்லதொரு பதிவு எழுதிக் கொண்டுதான் இருந்தேன். நேற்று இரவும், இன்றும் காலையும் நான் வழக்கமாக பதிவெழுதும் நேரங்களில் மின்சாரம் தடை பட்டதால் வேறு வழியின்றி அலுவலகத்தில் வந்து ’வெரி சிம்பிள், வெரி எஃபக்டீவ்’ என்றழைக்கப்படும் இந்தப் பதிவைப் போட வேண்டியதாய்ப் போய்விட்டது.