Showing posts with label அப்பா. Show all posts
Showing posts with label அப்பா. Show all posts

Monday, July 25, 2011

அப்பாவின் சைக்கிள்

ப்போதும் எங்கும் நடந்தே செல்லும் குடும்பம்தான் எங்களுடையது. மோட்டார் வாகனங்கள் வாங்கும் எண்ணமோ, வசதியோ கிஞ்சித்தும் இருக்க வில்லை. சைக்கிள் வாங்குவோம் என்று கூட நினைத்ததில்லை ஒரு கட்டத்தில்.

அப்பாவுக்கு சைக்கிள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதிலிருந்து இருந்தது என்று என்னால் கணிக்க முடியவில்லை. அப்பாவுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் இருந்தது. உடுமலை தளி ரோட்டில் சரஸ்வதி ஏஜன்சீஸில் வாங்கும் டி ஏ எஸ் பட்டணம் பொடிதான் அவர் ஃபேவரைட் ப்ராண்ட். அதற்காக தளி ரோட்டில் நானும் அவரும் நடந்து செல்வதுண்டு. அப்போதெல்லாம் எதிரிலிருக்கும் சைக்கிள் கடை ஒன்றை அவர் பார்ப்பதை கவனித்திருக்கிறேன்.

ஒரு நாள் அந்தக் கடைக்கு என்னை அழைத்துச் சென்றார். வெளியிலேயே சைக்கிள்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டிருக்கும். கடைக்குள் அப்பா அழைத்துப் போனதே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சைக்கிள் விலைகளைக் கேட்டறிந்து வந்தார். அதன்பிறகு சில மாதங்கள், அந்தப் பேச்சே இருக்கவில்லை. ஆனால் அவர் மனது முழுதும் அந்த சைக்கிளை வாங்கியே ஆகவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கக் கூடும்.

திடுமென்று ஒரு நாள் சைக்கிளோடு வீட்டுக்கு வந்தார். அப்பா சந்தோஷமாக சிரித்தபடி இருந்த தருணங்களை நினைவுகூர்ந்தால் இந்த சைக்கிள் வீட்டுக்கு வந்த தினமும் ஒன்று. முகமெல்லாம் அத்தனை மகிழ்ச்சி அவருக்கு இருந்தது. ஒரு நாள் விடாமல் தினமும் துடைத்து வைப்பார். சைக்கிளுக்கு பெல் மாட்டிவந்தது, டைனமோவை இயக்கி லைட் எரிவதை எங்களுக்குக் காண்பிப்பது என்று சந்தோஷமான தினங்கள் அவை.

ஆரம்பநாட்களில் அவர் சைக்கிளை கொஞ்சம் தயக்கமாகவேதான் ஓட்டினார். யாராவது எதிரில் வந்தால் முடிந்த அளவு ஒதுங்கிவிடுவார். நாளாக நாளாக எங்களையும் அழைத்து டபிள்ஸ் போக ஆரம்பித்தார்.

சைக்கிள் வாங்கி சிலபல மாதங்கள் கழித்து சைக்கிளின் செய்ன் கவரில் K.R.Balasubramanian என்று தன் பெயரை உடுமலை ராயல் ஆர்ட்ஸில் சொல்லி எழுதிக் கொண்டார். தினமும் துடைக்கும்போது அதையும் கர்மசிரத்தையாக துடைப்பார். சைக்கிள் ரிம், செய்ன் கவரின் பின்பக்கம், மர்காட் என்று அவர் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து துடைத்துக் கொண்டிருப்பார். (பின்னாளில் என் தம்பி அதிகமாக உபயோகிக்க ஆரம்பித்ததும் அவன் பெயரைச் சுருக்கி எழுதிக் கொடுத்தேன்.)







நான் கொஞ்சம் பெரியவனானதும் என்னை சைக்கிளை எடுத்துச் செல்ல அனுமதித்தார். ஒரு டிசம்பர் 31 அன்று அதை எடுத்துக் கொண்டு போய் நண்பர்களோடு இருந்துவிட்டு இரவு 1 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். இருட்டில் முள்ளில் விட்டதில் டயர் பஞ்சர். அடுத்த நாள் அப்பா சைக்கிளை எடுக்கப் போனபோது பார்த்து, பஞ்சர் ஒட்ட காசில்லாமல் நடந்தே அவர் வேலைக்குப் போனார். திட்டியிருந்தாலும் தேவலாம். ஒன்றுமே சொல்லவில்லை. இரண்டு தினங்கள் கழித்துதான் பஞ்சர் ஒட்டப்பட்டது.


ஊருக்குப் போகும்போதெல்லாம் அந்த சைக்கிளை ஒரு பாசப்பார்வை பார்ப்பதுண்டு. எடுத்து ஓட்டுவதும் உண்டு. தம்பிதான் அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறான். சமீபத்தில் போனபோது சைக்கிள் அருகே ஒரு யமஹா RX நின்று கொண்டிருந்தது. தம்பியின் நண்பனுடையது என்றான்.

நானும் எப்போது போனாலும் என் பைக்கை அந்த சைக்கிளை விட்டு கொஞ்சம் இந்தப் பக்கமாகத்தான் நிறுத்துவேன். என்ன ஆனாலும் அதற்கு ஈடாகாது என்பது என் மனது சொல்கிற பாடம்.

ஆனால் - எப்போது அந்த சைக்கிளைப் பார்த்தாலும் எனக்கு இடறும் விஷயம் ஒன்று உண்டு.

என்னையும் என் தம்பியையும் தவிர, என் பெரியம்மா மகன் கிருஷ்ணமூர்த்திதான் அப்பாவுடன் அதிகமாக சைக்கிளில் டபிள்ஸ் போனது. அதே போல சொந்தக்காரர்கள் வீட்டிலிருக்கும் எல்லா குழந்தைகளும் அப்பாவின் சைக்கிள் பின்னால் அமர்ந்து சவாரி சென்றிருக்கிறார்கள். ஆனால், எத்தனை முறை யோசித்தாலும் அப்பா, அம்மாவை வைத்து சைக்கிளில் போனதாய் என் நினைவிலேயே இல்லை. அம்மாவை அவர் சைக்கிளில் உட்காரவைத்துச் சென்றதே இல்லை.


.

Tuesday, June 17, 2008

தந்தை எனக்கெழுதிய கடிதம்!

அன்புள்ள கிருஷ்ணகுமாருக்கு...


உன் தந்தை பாசத்துடன் பாசத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.


உனக்கு நன்றாகத் தெரியும் எனக்கு குழந்தைகளென்றால் மிகவும் பிரியம். எனது எல்லா உறவினர் வீட்டிலும் அந்த வீட்டுக் குழந்தையை நான் எடுத்து வைத்துகொண்டு இருக்கும் புகைப்படம் இருப்பதை நீ அறிவாய். மற்ற குழந்தைகளை நேசித்த நான் உன்னை எப்படி நேசித்திருப்பேன் என்பதை சொல்ல வேண்டியதில்லை! நீ குழந்தையாய் இருக்கும்போது என்னிடம் மிகவும் ஒட்டிக்கொண்டிருப்பாய். அதனால்தானோ என்னவோ பெரியவனாக, ஆக விலகிவிட்டாய்!


நானொன்றும் பெரிய வசதிபடைத்தவனில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்ட காலத்திலும், சேர்த்திவைக்கத் தெரியாமல், எல்லோருக்கும் கொடுத்து நமக்கு தேவைப்படும்போது வெறும்கையோடு இருந்துவிட்டேன்! எங்கே - நீயும் அப்படி ஆகி விடுவாயோ என்கிற பயம் எனக்கு இருக்கிறது.


உனக்கு ஞாபகமிருக்கிறதா? நான் உடுமலை சேட்டு பெட்ரோல் பங்கில் கணக்கெழுதிக் கொண்டிருப்பேன். ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த நீ ஸ்கூலிலிருந்து வருவாய். நம்மிடம் அப்போது சைக்கிள் கூட இல்லை. வந்து என்னிடம் நோட்டு வாங்க காசு கேட்பாய். உன்னை வெளியில் நிற்கச் சொல்லிவிட்டு, நான் கொஞ்ச நேரம் கழித்து முதலாளியிடம் தயங்கித் தயங்கி கேட்டு, சம்பளத்திலிருந்து ஐந்து ரூபாய் வாங்கித் தருவேன். சில நாட்களில் அதுவும் முடியாமல், சரஸ்வதி ஸ்டோரில் என் பெயர் சொல்லி வாங்கிக் கொள்ளச் சொல்வேன். அப்பொழுதெல்லாம் உன்னைப் பார்க்கவே எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.


ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பன்னிரெண்டாயிரம் ரூபாயை ஒருமுறை உன்னிடம் கொடுத்துவிட்டு, டி.வி-யும், மிக்ஸியும் வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பணத்தை உன் நண்பனொருவனுக்கு கொடுத்துவிட்டு, வெறுங்கையோடு நீ வீடு வந்ததும், இன்றுவரை அது திரும்பிவராமலே போனதும் உனக்கு எப்போதாவது ஞாபகம் வருமா?

நீ குழந்தையாய் இருக்கும்போதிலிருந்து, பத்தாவது படிக்கும் வரை நாம் முதலில் கூட்டுக்குடும்பமாக இருந்தோம். எல்லோரும் என்னை "பாலுமாமா" என்று கூப்பிடுவது போல், நீயும் என்னை "பாலுமாமா" என்றுதான் கூப்பிடுவாய். நீ "அப்பா" என்றழைக்கவேண்டும் என்று நான் விருப்பப்படுவேனோ என்று நீ என்றாவது எண்ணியதுண்டா?


ஆறாவது படிக்கும் போது என் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து, காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி உன் புத்தகப் பெட்டியில் வைத்திருந்தாய். உன் மாமா அதைக் கண்டுபிடித்து என்னிடம் சொன்னபோதும், நான் உன்னை நேரடியாக கண்டிக்கவில்லை! உன்னை நான் அடித்ததாக எனக்கு நினைவிலேயே இல்லை. அதே போல உன்னை "டா" போட்டு நான் கூப்பிட்டதுமில்லை! நினைக்கும்போது எனக்கே ஆச்சரியமாகத்தானிருக்கிறது! ஒருவேளை உன்னை அடித்து, கண்டித்து வளர்த்திருந்தால் நீ இப்போதிருக்கும் நிலையை விட, நல்ல நிலைக்கு வந்திருப்பாயோ என்னவோ!


உனக்கு நான் அமைதியை கற்றுக்கொடுத்தேன். நீ எல்லோரிடமும் அளவுக்கதிகமாய் பேசிக்கொண்டிருக்கிறாய். நீ எத்தனையோ உயரங்களைத் தொட்டிருக்க வேண்டியவன்தான். உன் சோம்பேறித்தனத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறாய்.


ஓரிரு வருடங்களுக்கு முன் எனக்கு நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்தபோது, வாரத்திற்கு ஒருமுறையேனும் நீ வருவாயென என் கண்கள் உன்னை எதிர்நோக்கும். உன் "பிஸியான" வேலைப்பளுவுக்கு நடுவிலே அது உன்னால் முடியாமல் போனது! ஒரு விருந்தாளியைப் போல் அவ்வப்போது வந்தாலும் - வந்தபோதெல்லாம் எனக்கு நீ செய்த பணிவிடைகளுக்காக என்னால் உனக்கு கொடுக்க முடிந்ததெல்லாம் என் புன்னகையை மட்டும்தான். அதைக்கூட நீ புரிந்துகொண்டிருப்பாயா என்று தெரியவில்லை.


என்ன செய்ய.. என்னதான் நீ உலகவிஷயங்கள் பேசினாலும் பெற்றவர்களைவிட வேலைதான் முக்கியம் என்றாகிவிட்ட இந்த இயந்திரச் சூழலில் - நீயும் ஒரு சராசரியாகிப் போனதில் எனக்கு வருத்தமிருக்குமா என்று நீ யோசித்ததுண்டா?


என்னைப்பற்றி இனி கவலைப் படாதே.. உன் அம்மாவையாவது அவ்வப்போது போய் பார்த்துக்கொள். திருப்பூரின் சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்குத் தெரியுமென்றாலும்.. உன் முதலாளிகளுக்கு ஆயிரமாயிரம் பணியாளர்களுண்டு.. உனக்கு ஒரே அன்னைதான்! பிறகு வருந்திப் பயனில்லை. உன் தம்பி பாவம். அவனுக்கு கடைசிவரை நானிருப்பேன் என்ற உறுதிமொழியை எனக்குக் கொடு.. இதைச் சொல்வதற்காக வருந்தாதே.. ஒருவேளை உனக்கு அக்காவோ, தங்கையோ இருந்திருந்தால் அவர்களை கரையேற்றியிருப்பாயா என்பது எனக்கு சந்தேகமே. ஏனென்றால் நீ எப்போதுமே உனக்காக மட்டுமான ஒரு உலகத்தில்தான் இருக்கிறாய்!


வேலை வேலை என்றிருந்து பத்திரிகைகளுக்கு எழுதிப்போட நேரமில்லாதிருந்த நீ இந்த வலையுலகத்தில் எழுதத் துவங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி! நிறைய எழுது. அதற்காக தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதே. உன் உடம்பைக் குறித்து உனக்கு அக்கறை இருப்பதே இல்லை. தயவுசெய்து நேரத்திற்கு உண்டு, உறங்கி உடம்பை பார்த்துக்கொள். இதை உனக்காகச் சொல்லவில்லை. என் பேத்திகளுக்காக சொல்கிறேன்!


நேற்று தந்தையர் தினத்தில் எனக்காக ஏதாவது பதிவு போட்டிருப்பாய் என நினைத்தேன். ஏதோ குட்டிக்கவிதைகள் போட்டிருக்கிறாய். அதனாலென்ன நான் உன்னை தப்பாக நினைக்கவா முடியும்? (அந்த நாலாவது கவிதை உண்மையில்லையே?) அன்னையரைக் கொண்டாடும் அளவுக்கு, இங்கே தந்தையரை யாரும் கொண்டாடுவதில்லை!

உன் அம்மா, தம்பியைப் பார்த்துக்கொள். உமா, மீரா, மேகாவுக்கு என் ஆசிகள் எப்போதும் உண்டு!

மற்றபடி...

இங்கே சொர்க்கத்தில் யாவரும் சுகம்!


அன்புடன்...

உன் அப்பா.