Wednesday, February 11, 2015

போஸ்ட் ஆஃபீஸ்

99 நாள் ஃப்ரீடம் என்றொரு சமாச்சாரத்தில் இருக்கிறேன். 99 நாட்களுக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் குழுக்களிலெல்லாம் இல்லை. “ஓ.. அதான் ப்ளாக்ல அப்டேட்ஸா?” என்று புருவமுயர்த்துபவர்களுக்கு ஒரு புன்னகை. படிக்க சேர்ந்துவிட்ட புத்தகங்களின் மிரட்டலும், இங்கே அதிகமாக எழுதவேண்டுமென்றும்தான் இந்த விரதமே.

இந்த 99 நாட்களுக்காக மட்டுமல்லாமல் ரொம்ப நாள் ஆசையாக, ஒரு விஷயத்தை ஆரம்பித்திருக்கிறேன். கடிதமெழுதுவது. எழுதுவது என்றால் எழுதுவது. மின்னஞ்சல் அல்ல.

ஏற்கனவே ஆரம்பித்து, சிலபேருக்கு எழுதியும் ஆயிற்று. வித்யாசமான க்ராஃப் ஷீட், கலர் கலர் பேனாக்கள் என்று களத்தில் இறங்கிவிட்டேன்.

***

ரண்டு நாட்கள் முன்னர் போஸ்ட் ஆஃபீஸ் சென்றிருந்தேன். நண்பருக்கு ஒரு புக் பார்சல் அனுப்ப வேண்டியிருந்தது. முன் அறையில் பார்வைச்சவால் நிறைந்த ஒருவரும், ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர்.

”ஸ்பீட் போஸ்ட் பண்ணணும்”

“உள்ள ரெண்டாவது கவுண்ட்டர்” - என்றார் அந்தப் பெண்.

உள்ளே ஐந்து கவுண்ட்டர்கள் இருந்தன. அமர்ந்திருந்தவர்களில் நான்கு பேர் இந்த வருடத்திற்குள் ரிட்டயர்டாக இருப்பவர்களாக இருக்கலாம். இரண்டாவது கவுண்ட்டரில் விசாரித்தபோது, “இங்க ஸ்டாம்ப் மட்டும்தான். ஸ்பீட் போஸ்ட் அடுத்த கவுண்ட்டர்” என்றார்.

நான்கடி நகர்ந்து பின்னுக்கு வந்து நின்றேன். மொத்தம் எத்தனை கவுண்டர்கள் என்று மீண்டும் எண்ணினேன்.

ஐந்து.

ஆக, எந்தப் பக்கத்திலிருர்ந்து எண்ணினாலும் ஸ்பீட்போஸ்ட் இரண்டாவது கவுண்டரில்லை. மூன்றாவது. அல்லது நட்டநடு கவுண்டர் என்று சொல்லியிருக்கலாம் அந்த முன்னறைப் பெண். சரி, அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டேன்.

புத்தகத்தைக் கொடுத்து, எத்தனை ரூபாய்க்கு ஸ்டாம்ப் என்று கேட்டேன். அவர் எடை பார்த்துவிட்டு, சுற்றும் வேடிக்கை பார்த்துவிட்டு, வாட்ச்சில் மணி பார்த்துவிட்டு, டிரங்க் பெட்டியின் பூட்டை சரிபார்த்துவிட்டு, கணினியில் எதையோ பார்த்துவிட்டு

-101 ரூபாய் என்றார்.

இந்த நேரத்திற்குள், முன்னறையில் இருந்த பார்வைச் சவால் நிறைந்த அந்த நபர் வந்தார்.  குறிப்பிட்ட சில இடங்களில் நடையை எண்ணி, சரியாக அந்தப் பெண்மணிக்கு சற்றுப் பின்னால் வந்து நின்றார்.

“சித்ரா” (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றார்.

ஸ்பீட்போஸ்ட் பெண்மணி ஒன்றும் பேசவில்லை.

“சித்ரா”

அப்போதும் இந்த அம்மணியிடமிருந்து பேச்சேதும் இல்லை.

“ஓ.. அம்மாங்களா” என்றார் அவர். “சித்ரா இல்லீங்களா?”

“இல்ல” என்றார் இவர். அந்த நபர் நூறுரூபாயை பாக்கெட்டிலிருந்து எடுத்து, நூறு ரூபாயா என்று தடவித் தடவி சரி பார்த்து “சித்ராகிட்ட குடுக்கணும்” என்றார்.

ஸ்பீட்போஸ்ட் அம்மணி பக்கத்து கவுண்ட்டரி்ல் கொடுக்கச் சொல்ல அந்த நபர் “சரிங்க.. நான் நாளைக்கே குடுத்துடறேன்” என்று திரும்பி ஸ்டெப் வைத்து நடந்துபோனார்.

ஒரு பார்வையற்ற நபரின் குரலுக்கு முதல்தடவையிலேயே பதில் சொல்ல என்ன வந்தது இவருக்கு? இவர் அமைதியாக பதில் சொல்லாமல் இருப்பது கண்டு, அந்த நபரே “ஓ.. நீங்களா” என்று கேட்கிறார். உள்ளே பணிபுரியும் சக அலுவலருக்கே ரெஸ்பான்ஸ் இல்லாதபோது நாமெல்லாம் எம்மாத்திரம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஸ்பீட் போஸ்ட் வேலையை முடித்ததும் - திடீரென்று ஒன்று தோன்றியது.

85க்குப் பின் அல்லது 90களில் பிறந்தவர்களுக்கு இன்லாண்ட் லெட்டர் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும். அதில் கடிதம் சென்றிருக்குமா அவர்களுக்கு?

பக்கத்து கவுண்ட்டரில் கேட்டேன்.

“இன்லாண்ட் லெட்டர் இல்லீங்க”

“ஓ... நாளைக்கு வரும்களா?”

“தெரியலைங்க”

“இல்ல மேடம்.. ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் கடிதம் எழுதறதுன்னு நாலைஞ்சு பேர் முடிவு பண்ணீருக்கோம். அதுக்காக..”

“நல்ல விஷயம். பண்ணுங்க. இன்லாண்ட் இல்லை”

நான் வெளியில் வந்துவிட்டேன்.

**

நேற்றைக்கு வேறொரு போஸ்ட் ஆஃபீஸில் விசாரித்தபோதும் “இன்லாண்ட் இல்லை” என்ற பதிலே வந்தது.

“ஏப்ரலுக்கப்பறம்தான் வரும் சார். எந்த போஸ்ட் ஆஃபீஸ்லயும் இல்லை” என்றார்.

வெளியில் வந்தபோது, கையில் பேப்பர்களுடன் ஒருத்தர் நின்றிருந்தார். கோடுபோட்டப்பட்ட பேப்பரில் பலரின் கையெழுத்துகள். என்னவென்று கேட்டேன்.


“சார்... BSNL தனியார் மயமாக்கக்கூடாதுன்னு ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். பப்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கறோம். ப்ளீஸ் ஒரு கையெழுத்து போடுங்களேன்”

*******

3 comments:

திருச்சிற்றம்பலம் நிவாஸ் said...

எனக்கு நிறையஅனுபவம் இருக்கு சார் ... தெரிய தனமா போஸ்ட் ஆபீஸ் ல ஆர்டி அக்கௌன்ட் ஒன்னு ஓபன் பண்ணிட்டேன் ஆனால் அதுக்கு மாசம் மாசம் பணம் கட்டி முடிக்கிறதுக்குள்ள போதும் போதும் ன்னு ஆகிடுச்சு... விஷயம் என்னன்னா எனக்கு ஆபீஸ் ல ஒரு மணிநேரம் தான் அனுமதி தருவாங்க ... நான் காலைல 11.30 க்கு அங்க போய்டுவேன் ... வேக வேகமா சாலன் எழுதி அங்க கவுன்டர் ல கொடுத்த அந்த அம்மா வெயிட் பண்ண சொல்லும் கரெக்டா அங்க அம்மா சாப்பிட போற நேரதுக்கு கொஞ்சம் முன்னால என்னைய அழைக்கும் பணத்த வாங்கி வரவு வச்சுட்டு சில் பண்ண பின்னால கொடுத்துரும் ... அவர் சில் பண்ணி இன்னொரு மேடம் கிட்ட பாஸ் பண்ணும் ... கரெக்டா அந்த நேரம் பார்த்து அங்க இருக்கிற அந்த அம்மா சாப்பிட போய்டும் .. அது சாப்பிட்டு நின்னு நிதானமா 2 மணிக்கு வந்து சரி பார்த்து கையழுத்து போடும் ... திரும்பி கம்பெனி க்கு வர 3 மணி ஆகிடும் ...எனோட மேல் அதிகாரி வாங்கு வாங்கு ன்னு வாங்குவார் ... ஒரு ஆர்டி கட்ட 3 மணி நேரம் ... இப்படி சர்விஸ் இருக்க இதுல போஸ்ட் ஆபீஸ் லாம் நட்சதுல ஓடுதுன்னு சொல்றாங்க ... நீங்களே முடிவு பண்ணிக்கங்க ....

பிரதீபா said...

//“சார்... BSNL தனியார் மயமாக்கக்கூடாதுன்னு ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருக்கோம். பப்ளிக்கிட்ட கையெழுத்து வாங்கறோம். ப்ளீஸ் ஒரு கையெழுத்து போடுங்களேன்”
//
இதுக்கப்புறம்

“நல்ல விஷயம். பண்ணுங்க. யாரையும் நம்பிக் கையெழுத்துப் போடறது இல்லை”

ன்னு பஞ்ச் வெப்பீங்கன்னு எதிர்பாத்தேன், எதுவும் சொல்லாமலா வந்திருப்பீங்க !?

Jayakumar Chandrasekaran said...

எப்போது வேலை நிரந்தரம் என்று ஆகிறதோ அப்போதே அலுவல்களில் அலட்சியம் மற்றும் பொறுப்பின்மை வந்து விடுகிறது.இது எல்லா அரசு அலுவகங்களுக்கும் பொருந்தும். அதற்காக எல்லா பொதுசேவை அலுவல்களையும் தனியார் மயமாக்க கூடாது.இரண்டிற்கும் பொதுவாக எமெர்ஜென்சி போன்ற ஏதாவது கண்டுபிடித்து சேவையை மேம்படுத்தவேண்டும். எமெர்ஜென்சி வேண்டாம்.

--
Jayakumar