Showing posts with label Payanam. Show all posts
Showing posts with label Payanam. Show all posts

Sunday, February 13, 2011

இலக்கை அடைந்த பயணம்

யக்குனர்களில் நான் ராதாமோகனின் பரம விசிறி. அவர் படமென்றால் நம்பிப் போகலாம் என்று நினைக்கிற ரகம். இதுவரை அவரும் என்னை ஏமாற்றியதில்லை. அழகிய தீயே ட்ரெய்லரின் போதே ‘ஆஹா... இந்தாளு வித்தியாசமான ஆளு’ என்று நினைக்க வைத்தவர். (அந்த ட்ரெய்லர் யு ட்யூப்பில் கிடைக்கவில்லை. எங்காவது கிடைத்தால் சுட்டி தாருங்களேன்..) போலவே அந்தப் படமும் அதை நிரூபித்தது. மொழி எல்லோரையும் சென்றடைந்தது. அபியும் நானும் பலரையும் பேசவைத்தது. இப்போது பயணம்.





எந்தக் கலைஞனுக்கும் அவன் மனதுக்கு ஒத்த சக கலைஞனின் ஆரோக்யமான தோழமை கிடைப்பின் ரசிகர்கள் பாக்யவான்களாவார்கள். வைரமுத்து-இளையராஜா பிரிவை இன்றும் ஏமாற்றமாய்ப் பேசுகிற பலர் இருக்கிறார்கள். கலையுலகில் இந்த மாதிரிக் கூட்டணிகள் இருப்பது ஆரோக்யமான போக்கு. இளையராஜா-வைரமுத்துவிற்குப் பிறகு ரசிகர்கள் இந்த மாதிரி கூட்டணி எதிர்பார்த்துப் பேசியது மணிரத்னத்தில் இயக்கத்தில் பி சி ஸ்ரீராமின் காமிரா என்று நினைக்கிறேன். இப்போது பலரையும் அப்படிப் பார்க்கலாம். செல்வராகவன் இயக்கத்தில் யுவனின் இசை, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தாமரையின் வரிகள் என்று சாதாரண ரசிகனினும் ஒருபடி நிலை தாண்டி, இவற்றையெல்லாம் கவனிக்கிற ரசிகர்கள் கூட்டத்திற்கு ராதாமோகன்-ப்ரகாஷ்ராஜ் கூட்டணி இதுவரை குறைவைத்ததில்லை. இந்த விமர்சனத்தை இவர்களிருவரில் யாரேனும், அல்லது அவர்களுக்கு நெருக்கமான எவரேனும் வாசிக்க நேர்ந்தால், யாரிடமேனும் சொல்லி, இருவரையும் கூட்டாக நிற்கவைத்து திருஷ்டிகழியுங்கள். எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை எனினும் – நல்லவை சிலவற்றிக்கு நம்பிக்கை அவசியமில்லை.

த.செ.ஞானவேல். ஈஷா விழா சம்பந்தமாக ப்ரகாஷ்ராஜ் திருப்பூர் வந்திருந்தபோது, உடன் வந்திருந்தார். ஏற்கனவே நண்பர் செல்வேந்திரன் மூலம் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன் அவர் மீது. அப்போது சந்தித்தவரின் பேனா இப்படியெல்லாம் எழுதுமென்று எள்ளளவும் நினைக்கவில்லை. குறைத்து மதிப்பிட்டு விட்டேன் என்றெல்லாம் இல்லை. இந்தப்படத்தின் வசனம் பல தலைமுறை அனுபவஸ்தன் எழுதியாற்போலே அவ்வளவு நேர்த்தி. ஒரு வார்த்தை அதிகமில்லை. ஒரு வார்த்தை குறைவில்லை. இது ஞானவேலுக்கு எத்தனையாவது படமென்ற புள்ளிவிவரமெல்லாம் என்னிடம் இல்லை. ஆனால் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் நபரிலிருந்து, பால்கனியில் அமர்ந்திருக்கும் நபர் வரை அனைத்துத் தரப்பினரும் புரிந்து வியந்து கைதட்டக்கூடிய வசனங்கள். ஞானவேல்தான் படத்தின் நாயகன். நாகார்ஜூன், பிரகாஷ்ராஜெல்லாம் கதாபாத்திரங்கள்தான். ஞானவேல் – உங்களுக்கு என் அன்பு.

வசனங்களை எழுதியது ஞானவேல்... இந்த இடத்தில் இந்த மாதிரியான வசனம் வரவேண்டும் என்று சொல்லியிருப்பது ராதாமோகனாக இருக்கக் கூடும். அவரை நேரில் பார்த்தால் என்ன செய்வேன் என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு, ‘நீங்க பக்கோடா சாப்பிடுங்க சார்’ என்றொரு வசனம் வருகிறது. ப்ரகாஷ்ராஜ் சொல்கிறார். நன்றாக திரையில் கவனியுங்கள். அது சொல்லப்பட்ட காட்சி, சொல்லப்பட்ட நேரம் என் கைகளைத் தட்டித் தட்டிச் சிவக்க வைத்துவிட்டது. போலவே பல வசனங்களும். எழுத வேண்டாமென்று விட்டுவிடுகிறேன்.

ஒரு கதையெழுதுகையில் ஆரம்பம் சரியாக இருக்க வேண்டும். படத்திற்கும் அப்படித்தான். இந்தப் படத்தின் ஆரம்பம் நான் சமீபத்தில் பார்த்த படங்களிலேயே கச்சிதமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும், அவர்களின் மனநிலையும் படத்தின் முதல் சில நிமிடங்களில் காட்டி, நம்மையும் அவர்களுடன் அந்த விமானப்பயணத்தில் இணைக்கிறது ராதாமோகனின் திறமை.

ராதாமோகனுக்கு சராசரித் தமிழ்ப் படங்களின் மீதுள்ள கோபம் படம் நெடுகத் தெரிகிறது. இதற்காக அவர் திரையுலகில் சிலரின் எதிர்ப்பையும், முணுமுணுப்பையும் இந்நேரம் பெற்றிருக்கக் கூடும். ஆயினும் திரையரங்கில் ஒவ்வொரு பஞ்ச் டயலாக்குகளின் போதும் ஒலிக்கிற கைதட்டல் ஒலி, ரசிகர்களும் ராதாமோகன் பக்கம்தான் என்று பறைசாற்றுகிறது. அவர்களும் இந்தக் க்ளிஷேப் படங்களிலிருந்து மீள நினைக்கிறார்கள்தான். ஆனாலும், சரியான நேரத்தில், க்ளைமாக்ஸில் ஒரு காட்சி மூலம் ஹீரோக்களின் கோவத்திலிருந்து தப்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கையில் வழக்கமான தமிழ்ச்சினிமா விதிகளிலிருந்து ராதாமோகனும் தப்பமுடியாது என்று நினைத்துக் கொண்டேன்!

எத்தனை சீரியஸான படம்! ஏறக்குறைய உன்னைப் போல் ஒருவன். ஆனால் குறிப்பிட்ட இடைவேளைகளில் கைதட்டலும், வெடிச்சிரிப்புமாய்த்தான் இருக்கிறது தியேட்டரில். சில வசனங்கள் (குறிப்பாக ப்ருத்விராஜிடம், அவர் ரசிகனான சாம்ஸ் பேசும் காட்சிகள்) கைதட்டல் ஒலியினால் கேட்கவே இல்லை.

சின்னச் சின்னக் காட்சிகளில் கதை சொல்வது ராதாமோகனின் ஸ்பெஷாலிட்டி. இதிலும் அதைப் பல இடங்களில் செய்திருக்கிறார். எவையெவை என்று விவரிக்க மனம் மறுக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் படம் பார்க்கவேண்டும் என்ற எண்ணமே அதற்குக் காரணம்.

அந்த சர்ச் பெல். ரொம்பச் சின்ன விஷயம்தான். பாலசந்தர் அதில் விற்பன்னன். படத்திற்கு சம்பந்தமில்லாத எதையும் காட்ட மாட்டார். காட்டினால் எங்காவது அதைச் சம்பந்தப்படுத்தி அட போட வைப்பார். ராதாமோகனும் அவ்வாறே. சர்ச் பெல் கேட்டதும், அருகில் சர்ச் இருக்கிறது என்று பாதிரியார் ப்ரார்த்தனையில் ஈடுபடுவதோடு நின்று விடாமல், அதை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து இணைத்த விஷயத்தில் ராதாமோகன் என்னைக் கவர்கிறார். அதேபோல டி ஆர் பி ரேட்டிங்குக்காக மீடியாக்கள் செய்யும் வேலைகளைத் துகிலுரித்ததிலும் இயக்குனர் ஜொலிக்கிறார்.

கதாபாத்திரங்கள்? ப்ரகாஷ்ராஜ், நாகார்ஜூன், எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், தலைவாசல் விஜய், ப்ருத்விராஜ், ப்ரம்மானந்தம், மோகன்ராம், படவா கோபி, மனோபாலா, சாம்ஸ் கோஷ்டிகளையெல்லாம் விடுங்கள். விமானத்தின் டாய்லெட்டை சுத்தப்படுத்துகிற கேரக்டரில் ஒரு பெண் நடித்திருக்கிறார். ஏர்ஹோஸ்டஸாக ஒரு பெண். காக்காவலிப்பு வருகிற ‘ஜூனியர் ஆர்டிஸ்ட்’ கேரக்டரில் ஒருவர் நடித்திருக்கிறார்.




இவர்களையெல்லாம் இப்படி நடிக்க வைக்க முடிவது இயக்குனரின் திறமையன்றி வேறென்ன. டீலா நோ டீலா ரிஷி, சனா கான் இவர்களெல்லாம் இப்படியும் நடிப்பார்களா என்ன? ராதாமோகன் – You are Rocking Man!

நான் டிக்கெட் முன்பதிவு செய்கையில், இருவர் ‘படம் எப்படின்னு தெரியலயே’ என்று யோசித்துக் கொண்டிருக்க.. ‘நம்பிப் போலாம்க’ என்றேன். இடைவேளையின்போது அவர்களிருவரும் என்னைப் பார்த்து நன்றி சொன்னதே படத்தின் வெற்றிக்கு சாட்சி. ‘செம ஜாலியாப் போவுதுங்க’ என்று ஒரு சீரியஸ் ஜானர் படம் பெயர் வாங்குவதென்பது நான் இதுவரை கேட்டிராதது!

ஒவ்வொரு படத்திலும் புதிய கருவை எடுத்துக் கொண்டு அதை செவ்வனே செதுக்கி கச்சிதமாக நமக்கு விருந்து வைப்பதில் ராதாமோகன் ஜெயித்துக் கொண்டே வருகிறார். வழக்கமான படங்கள் எத்தனை வந்தாலும் - பாடல்களின்றி, பறபறக்கும் சண்டைக் காட்சிகளின்றி, தொப்புள் தெரியும் நாட்டியமின்றி மாறுபட்டு படமெடுக்கும் இவரது படங்களை வெற்றி பெற வைப்பது ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்த வரையில் அல்லது நான் புரிந்து கொண்ட வரையில் இந்தக் கூட்டணி - வெற்றி, தோல்விகளைப் பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. இந்நேரம் அடுத்த படைப்புக்கான தேடலில் இறங்கியிருப்பார் ராதாமோகன். ஆனால் இதுபோன்ற படமெடுப்பவர்களுக்கு உரிய அங்கீகாரமளிப்பது நம் கடமை என்று நம்புகிறேன் நான்.

என் சார்பாக படக்குழுவினருக்கு – பல நூறு பூங்கொத்துகள்.


.