சம்பவம் – 1
காலை எட்டு மணி. இவன் குடும்பத்தோடு அந்த இரயில் நிலையத்திற்குள் நுழைந்தான். பிளாட்ஃபாரத்துக்குள் ‘போய்ட்டு ஃபோன் பண்ணுங்க’ளுக்கும், காபி டீ, காபி டீக்களுக்கும் நடுவில் பயணிகளை கவனிக்கச் சொல்லிக் கொண்டிருந்தது பெண் குரல். இவன் நீஈஈஈஈளமாக நின்று கொண்டிருந்த க்யூவின் வால் பிடித்து நின்றான். மனைவி, குழந்தைகளை ‘அப்படி வெய்ட் பண்ணுங்க.. டிக்கெட் வாங்கீட்டு வர்றேன்’ என்றான்.
க்யூ மெது மெதுவாக டிக்கெட் கவுண்ட்ரை நோக்கி நகர ஆரம்பித்தது. இவன் இருந்த க்யூவுக்கு அருகில் ரிசர்வேஷன் கவுண்டர் முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் முழுவதும் ஆக்ரமிக்கப்பட்டிருந்தன.
அப்போதுதான் திடீரென உள்ளே வந்தார் ஒரு காக்கிச் சட்டைக்கார போலிஸ்காரர். இடையூறாக நின்று கொண்டிருந்த பயணிகளை ஓரமாக நிற்கச் சொன்னார். அவர் குரலில் கடுமை கூடி இருந்தது. பெண்கள், குழந்தைகள் எல்லாரிடமும் அதட்டும் குரலில் பணித்துக் கொண்டிருந்தார். இவன் அவரது நடவடிக்கைகளை கவனிக்கத் துவங்கினான். என்ன இந்தாளு வர்றவன் போறவன்கிட்டயெல்லாம் எரிஞ்சு விழுந்துட்டிருக்கான் என்றார் இவனுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவர். அந்தப் போலீஸ்காரருக்கு எல்லாரும் தன்னை பய உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருப்பது ஒருவித மிதப்பைத் தந்திருக்கக் கூடும். முன்னை விடவும் நடையில் கடுமை கூட்டிக் கொண்டு அந்த ரிசர்வேஷன் கவுண்டர் முன் வந்து நின்று இடுப்பில் கைவைத்துக் கொண்டு அகலமாக தன் பார்வையை வீசினார். இரண்டாவது வரிசையில் ஒரு நாற்காலி காலியாக, ஒரு லெதர் பை வைக்கப்பட்டு இருந்ததை கவனித்து அதனருகில் வந்து நின்றார்.
‘ஏய்.. அந்தப் பையைத் தூக்கிப் போட்டுட்டு சேர்ந்து உட்காருங்க’ என்றார். உடனே அருகில் அமர்ந்திருந்த இளைஞன் ‘திஸ் ஈஸ் மை ஃப்ரெண்ட்’ஸ் பேக். ஹி ஈஸ் கமிங் சார். கோயிங் ஃபார் ஏ டி எம்’ என்றான் உடைந்த ஆங்கிலத்தில். அவ்வளவுதான். ஏதோ வெறி வந்தவரைப் போல அந்தப் போலீஸ்காரர் பாய்ந்து வந்து அவன் சட்டையப் பிடித்துத் தூக்கினார். ‘டேய்.. நாயே.. என்னடா இங்கிலீஸு? எட்ரா அந்த பேகை. எடுத்துட்டு நீயும் வெளில ஓடிப்போய்டு’ என்றார்.. இல்லையில்லை... என்றான். இளைஞன் தீனமான குரலில் ‘ஐ டோண்ட் நோ டமில் சார்.. வாட் மிஸ்டேக் சார். வி ஆர் வெய்ட்டிங் ஃப்ரம் ஏர்லி மார்னிங் சார்’ என்றான். அவன் சட்டைக் காலர் போலீஸ்காரன் கையில் இருந்தது.
வடநாட்டு இளைஞன். மொழி தெரியவில்லை அவனுக்கு. அதைப் பற்றியெல்லாம் போலீஸ்காரன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் சட்டையைப் பற்றியவாறே தரதரவென இளைஞனை இழுத்து கொஞ்ச தூரம் கொண்டு விட்டான். திரும்பி ரிசர்வேஷன் நாற்காலி வரிசையில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து ‘அந்த ரெண்டு சேர்லயும் மாறி சேர்ந்து உட்காருங்க. அவனுக வந்தா விடக்கூடாது ஆமா’ என்றான். அமர்ந்திருந்தவர்கள் அந்த அதிகாரத்தின் குரலுக்குக் கட்டுப்பட்டவர்களாக சடாரென மாறி உட்கார்ந்தார்கள். எவருக்குமே எதற்காக அந்தப் போலீஸ்காரன் அப்படிச் செய்தான் என்பது தெரியவில்லை.
’பாவம்க அந்தப் பையன். இங்க்லீஷ்ல கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசிட்டான் போல.. அதுனாலதான் இந்தக் கதி’ என்றார்கள் சிலர். இந்த போலீஸ்காரன் எப்பவுமே இப்படித்தான் என்றார்கள் சிலர். இது நடந்தபிறகு அந்த வழியாக போலீஸ் வந்தபோதெல்லாம் சுற்றிலும் நிசப்தம் நிலவியது.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த இவன், தன் முறை வந்ததும் டிக்கெட் வாங்கிக்கொண்டு அமைதியாக மனைவி, குழந்தைகளை அழைத்துக்
கொண்டு பிளாட்ஃபாரத்துக்குள் சென்றான்.
*****************************
சம்பவம் – 2
இவன் அந்தச் சாலையில் சென்று கொண்டிருக்கிறான். இரைச்சலோடு வாகனங்கள் இவனைக் கடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு சக்கர, நான்கு சக்கர, மூன்று சக்கர என்று அந்த ஊரின் எல்லா வாகனங்களும் அந்த வழியாகத்தான் செல்வதுபோல இருந்தது அவனுக்கு.
கொஞ்ச நேரத்தில் கேட்டது சைரன் ஒலி. புழுதி பறக்க ட்ராஃபிக் போலீஸ்
வாகனம் ஒன்று எல்லாரையும் ஒதுங்கிச் செல்ல சொன்னபடி பறந்தது. வாகன ஓட்டிகள் சடாரென சாலையின் ஒரு பகுதியில் தங்கள் வாகனங்களைச் செலுத்த ஆரம்பித்தனர். ஒரு சிலர் ஓரமாக நிறுத்தியே விட்டனர். அதில் இவனும் ஒருவன்.
அது ஒருவழிப் பாதை. ட்ராஃபிக் போலீஸ் வாகனத்தைத் தொடர்ந்து ஸ்கார்ப்பியோ, சுமோ என்று பெரிய பெரிய கார்கள் சைரன்களோடும், கட்சிக் கொடிகளோடும் மின்னல் வேகத்தில் இவன் நின்று கொண்டிருந்த இடத்தைக் கடந்தது. கிட்டத்தட்ட இருபது கார்கள். எல்லாம் போனபிறகு மறுபடி சீராக எல்லாரும் தங்கள் வாகனங்களைச் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த ஹார்ன் ஒலியோடு இவனைக் கடந்த கட்சிக் கொடி பறந்த சுமோ ஒன்று சடாரென ப்ரேக்கிட்டு நின்றது. அது நின்ற வேகத்தில் அருகில் சென்று கொண்டிருந்த எல்லா இருசக்கர வாகனங்களும் நின்றன. காரின் ட்ரைவர் மிக வேகமாக இறங்கினான். அப்போதுதான் இவன் கவனித்தான். காருக்கு சற்று முன் வலதுபுறம் திருப்பவேண்டி ஒரு நடுத்தர வயதுக்காரர் தனது ஸ்கூட்டியைத் தடுமாறி நிறுத்தியிருந்தார். இந்த ட்ரைவர் ஓடிச் சென்று அந்த ஸ்கூட்டியில் ஆடிக் கொண்டிருந்த சாவியைப் பிடுங்கி வைத்துக் கொண்டு, அவரிடம் ஏதோ சொல்லியபடி மறுபடி அதே வேகத்தில் தன் காரில் வந்தமர்ந்து காரைச் செலுத்திச் சென்றான். ட்ரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு கட்சிக்காரர் ட்ரைவர் செய்வதை மிதப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.
சாலையில் இருந்த எல்லாருமே அந்த நடுத்தர வயதுக்காரரை பாவமாகவே பார்த்தனர். எல்லா கார்களோடும் சேர்ந்து செல்ல வேண்டிய ஏதோ ஒரு பிரமுகரின் கார், கொஞ்சம் தாமதமாகப் பின்தொடரவே செல்லும் வேகத்தை அந்த ஸ்கூட்டிக்காரரின் செயல் மட்டுப்படுத்தியதே அவர்களின் கோபத்துக்குக் காரணம் என்று பேசியபடி கலைந்து கொண்டிருந்தனர். கலெக்டர் ஆஃபீஸ்தான் எல்லா காரும்போகுது.. போனா சாவியை வாங்கிக்கலாம் என்று யாரோ அவருக்கு சொன்னார்கள். இது நடந்த இடத்துக்கும் கலெக்டர் அலுவலகத்துக்கும் ஏழு கிலோமீட்டர் தூரமாவது இருக்கும். அலுவலக வேலையாக வெளியில் வந்த இவனுக்கு நேரமாகி விட்டிருந்தது. தனது பைக்கை விரட்டியபடி அந்த இடத்தைக் கடந்தான் இவன்.
********************************
முதல் சம்பவத்திலாவது பரவாயில்லை.. இவன் குடும்பத்தோடு இருந்தான். இரண்டாவது சம்பவத்தில் இவன் கொஞ்ச நேரம் நின்று அந்த ஸ்கூட்டிக்காரரின் வேதனையில் பங்கெடுத்திருக்கலாம். எல்லாரும் அவரவர் வேலையப் பார்த்துக் கொண்டு நகர, அந்த நடுத்தர வயதுக்காரர் தனக்கு ஏன் இது நேர்ந்தது என்று தெரியாமலே பாவமாக சாவி எடுக்கப்பட்ட ஸ்கூட்டியை தள்ளிச் சென்ற காட்சி கொடூரமானது. பள்ளிக்குச் சென்ற மகளை அழைத்து வருவதற்காக அவர் சென்று கொண்டிருக்கக்கூடும். மருத்துவமனையில் இருக்கும் யாரோவைப் பார்க்கச் சென்று கொண்டிருக்கக்கூடும். எதுவாயினும் அவருக்கு அந்த நேரத்தில் நிகழ்ந்தது கொடுமை. குறைந்தபட்சம் சாவியை எடுத்தாலும் வயர்களைப் பிடுங்கி ஸ்கூட்டியைச் செலுத்திப் போக அவருக்கு உதவிவிட்டு வந்திருக்கலாம். இந்த லட்சணத்தில் தனது பைக்கில் அச்சம் தவிர் என்று பாரதியார் வாசகம் வேறு ஒரு கேடு இவனுக்கு...
நீங்களே சொல்லுங்க சார்.. இவனெல்லாம் உருப்படுவானா?
.