ஸ்கூல்ல நாங்க ஒரு அஞ்சு பேர். நான், சரவணமூர்த்தி, தர்மராஜ், ரஞ்சித், முத்துராமன். ஒண்ணாங்க்ளாஸ்லேர்ந்து அஞ்சாங்க்ளாஸ் வரைக்கும் செட்டா இருந்தோம். ஆறாங்க்ளாஸ்ல ஸ்கூல் ஒரே (உடுமலைப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி) ஸ்கூல்தான். செக்ஷன் பிரிச்சப்போ எக்குத்தப்பா பிரிஞ்சுட்டோம்.
ஒண்ணாங்களாஸ்ல ஒவ்வொருத்தரா ஒண்ணு சேர்ந்து நாலு பேரா என் வீட்டுக்கு வருவாங்க. என் வீடுதான் ஸ்கூலுக்குப் பக்கத்துல இருந்தது. ஒண்ணா போய், ஒண்ணா வருவோம். பெரிசாகி ஒருத்தன் டாக்டராகணும், ஒருத்தன் இஞ்சினியர் ஆகணும்.. இப்படி எந்த கமிட்மெண்டும் இல்லாத குழந்தைப் பருவம்.
இதுல ரஞ்சித், தர்மராஜ்கிட்ட ஒரு தொடர்பும் இப்ப இல்ல. முத்துராமன் இங்க திருப்பூர்லதான் இருக்கான்னாலும் எப்பவாவது ரோட்ல பார்த்து ஒரு சிறு தலையசைவோட போகறதோட சரி.
சரவணமுர்த்திய நினைக்கும்போது உடனே என் நினைவுக்கு வர்ற விஷயம்.. எல்லாருமே.. அல்லது பெரும்பாலானவங்க தங்களோட அப்பாவை வாங்க போங்கன்னு கூப்பிடுவாங்க. அம்மாவை வா, போன்னுதான் கூப்பிடுவாங்க. அம்மாவையும் இவன் வாங்க, போங்கன்னுதான் கூப்பிடுவான். இந்த சரவணமூர்த்தி கூட தொடர்பு இல்ல. ஆனா அவன் சம்பந்தப்பட்ட ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு.
ஒருதடவை ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒண்ணுல இந்த பத்து காரியத்துல ஒண்ணையாவது இன்னைக்கு பண்ணுங்க-ன்னு இருந்தது. படிச்சா.. அதுல ‘ரொம்ப நாள் தொடர்பில் இல்லாத உங்கள் நண்பருக்குத் தொலைபேசுங்கள்’ன்னு இருந்தது. உடனே என் ஞாபகத்துக்கு வந்தது சரவணமூர்த்திதான். முத்துராமனைத் தொடர்பு கொண்டு அவன் நம்பர் வாங்கி... “ஹலோ”ன்னேன். கிட்டத்தட்ட 20,25 வருஷங்கள் கழிச்சு ஒரு நண்பன்கிட்ட பேசறேன். அவன் ரொம்ப ஸ்டைலா “ஹலோ”ங்கறான். “நான் கிருஷ்ணகுமார் பேசறேன்”ன்னதும் ஒரு உணர்ச்சியும் இல்லாம “தெரியல”ன்னுட்டான். அதான் உண்மை. 25 வருஷம் கழிச்சுக் கூப்ட்டா எவனுக்குத் தெரியும்? முத்துராமன் அடிக்கடி பேசுவேன்னு சொன்னானேன்னு, அவன் பேரைச் சொன்னா அது புரியவே அரை மணிநேரமாச்சு அவனுக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா விளக்கினா.. “ஓ! கே.பி-யா? ஏண்டா அதச் சொல்றதில்லயா?”ங்கறான். அவன் என் இனிஷியலச் சொல்லித்தான் கூப்பிடுவான். (அப்போ கவாஸகி பஜாஜ் செம ஃபேமஸ்!) பேசிட்டு வெச்சுட்டான்.
அதுக்கப்பறம் அப்படி ஒரு விளம்பரத்தை நான் பார்க்கவுமில்லை. அவனைக் கூப்பிடவும் இல்ல! ஏன்னு எனக்கே தெரியல.
_--------------------------
ஏழாங்களாஸ்லேர்ந்து 9ம் க்ளாஸ் வரைக்கும் நான் ஜெய்சங்கர்-ங்கற பையனோட ரொம்ப அட்டாச்டா இருந்தேன். அவன் ஒரு நாள் பேசலைன்னா அப்செட் ஆகிடுவேன்.. அந்தளவு. நாங்க ரெண்டுபேரும் திக் ஃப்ரெண்ட்ஸ்ங்கறது ஸ்கூலுக்கே தெரியும். படிப்பிலயும் அவனும், நானும் ஃபர்ஸ்ட், செகண்ட்னு வாங்குவோம். என்ன காரணமோ நடுவுல ஒருத்தன் எங்க ரெண்டு பேரையும் பிரிச்சான். (அவன் பேருகூட ஞாபகம் வரல இப்போ!) க்ளாஸ்ல அவன் என்கிட்ட பேசறதில்லன்னு தெரிஞ்சு எங்க க்ளாஸ் மாஸ்டர் எங்க ரெண்டுபேரையும் கைகோர்த்து முட்டிகூட போடச் சொன்னார். “நான் பேசுவேன். அவன்தான் பேச மாட்டீங்கறான்”ன்னு நான் சொன்னது எடுபடவே இல்ல. அரை நாள் பூரா அப்படி நின்னும் அவன் என்கிட்ட பேசவே இல்ல. எங்க கணக்கு மாஸ்டர் என்கிட்ட “விடுடா. படிப்ப கவனி. அவன்கிட்ட யாரோ என்னமோ சொல்லீட்டாங்க”ன்னார். ப்ளஸ் ஒன்-ல அவன் இங்க்லீஷ் மீடியம் போய்ட்டான். பாதில திருச்சிக்கு போய்ட்டான். ப்ளஸ் டூ படிக்கறப்போ அவன் திருச்சில சூசைட் பண்ணிகிட்டதா தகவல் வந்து இங்க்லீஷ் மீடியம் பசங்க போய்ட்டு வந்தாங்க. எனக்கு ஒரு ஃபீலிங்க்ஸும் வரல. ஆனா போய்ட்டு வந்த பசங்க “அவங்கம்மா உன்னைக் கேட்டாங்கடா”ன்னப்போ தொண்டை அடைச்சுகிட்டது.
**************************
அதுக்கப்பறம் ஜனனி ஆர்ட்ஸ் வெங்கடாசலம் தம்பி சசிதான். இவன் மேலயும் அப்படி ஒரு ஃப்ரெண்ட்ஷிப். எங்க போனாலும் இவன்கூட சுத்துவேன். இவனும், நானும், பாக்யா ஆர்ட்ஸ் வெச்சிருக்கற நாகராஜும் எப்பப் பார்த்தாலும் ஒண்ணா சுத்தீட்டு ஒரு ட்ரிப் பாண்டிச்சேரியெல்லாம் போனோம். அப்போ மூணு பேரும் கடைசி வரைக்கும் இப்படியே இருக்கணும். மூணு பேரும் ஒரே மாதிரி வீடு கட்டி, நம்ம வைஃப் மூணு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா இருந்து... இப்படி பல கனவுகள்.. கற்பனைகள். இப்போ ‘ஹாய் ஹலோ’வோட சரி. சசி அடிக்கடி பேசுவான். என் வலைப்பூ படிப்பான். ‘ஒனக்கொரு சூப்பர் டெம்ப்ளேட் ரெடி பண்ணி வெச்சிருக்கேன்’ன்னு ரொம்ப நாளா சொல்றான். பார்க்கலாம்.
ரொம்ப ரொம்ப முக்கியமான ஃப்ரெண்ட்ஷிப்னா அது கனலி, செந்தில்தான். கனலி இப்போ திருப்பூர்லதான் இருக்காரு. செந்தில் லண்டன் போய்ட்டான். இவங்க ரெண்டு பேரையும்தான் நான் மனசாட்சி-ம்பேன். இந்த லிஸ்ட்ல இப்போ சௌந்தரும் வந்திருக்காரு. ஆனா கனலி, செந்தில்ன்னா..... ப்ச்.. சம்திங் எக்ஸ்ட்ரார்டினரி!
இவங்க ரெண்டு பேரும் என்ன சொன்னாலும் எங்கவீட்ல நோ அப்ஜெக்ஷன்.
***********************
இதுக்கப்பறம் எனக்குக் கிடைச்ச வலையுலக நட்புகள் பத்தித்தான் ஊருக்கே தெரியுமே... சாரு வெளியிடற பத்து புக், சாரு வெளியிட்ட அடுத்த பத்து நிமிஷத்துல இந்த சாருக்கும் கிடைக்க வைச்ச நண்பர்...
த.மு.எ.ச வெளியிட்ட மாண்ட்டோவின் படைப்புகள்-ங்கற அற்புதமான ஆவணத்துக்கு நிகரான புத்தகத்தை ஜஸ்ட் லைக் தட் அனுப்பி ஒண்ணுந்தெரியாம் அண்ணே சொல்ற நண்பர்... இப்படி ஆரம்பிச்சா உண்மைத்தமிழன் பதிவா நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்டு போகுமளவு நண்பர்கள்!