Showing posts with label சும்மா.... Show all posts
Showing posts with label சும்மா.... Show all posts

Saturday, January 10, 2009

அடுத்த மூணு விஷயம்....

நீங்கள் எப்போதாவது உற்சாகம் குறைந்து காணப்பட்டால் என்ன செய்வீர்கள்? யோசித்ததுண்டா? யோசித்துப் பாருங்களேன்.

சிலருக்கு செய்து கொண்டிருக்கும் வேலையை கிடப்பில் போட்டுவிட்டுப் போய் ஒரு தம் பிடித்து விட்டு வந்தால் உற்சாகம் ரீ சார்ஜ் ஆகிவிடும். சிலருக்கு பிடித்த கேர்ள் ஃப்ரெண்டை ஒரு பார்வை பார்த்து விட்டுக் கடந்தால் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். காதலி/காதலனுடன் ஒரு அலைபேச்சு பேசினால், கொஞ்சம் வெளியே காலாற நடந்தால், நண்பனோடு அரட்டையடித்தால் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று.

எனக்கு செய்யும் வேலையை விட்டு விட்டு ஒரு பத்து நிமிடம் வேறு வேலையைச் செய்வதோ, அல்லது வெளியே சென்று அண்ணாந்து வானத்தைப் பார்த்து ஏதேனும் சிந்திப்பதோ வழக்கம். ‘அண்ணாந்து வானத்தைப் பார்ப்பியா.. கி.கி.கி...’ என்று சிரிப்பு வருகிறதா...

வானத்தில் மேகங்கள் கலைவதை வேடிக்கை பார்த்திருக்கிறீர்களா? ஒரே தமாஷாக, வியப்பாக இருக்கும். சிலசமயம் ஒரு காதலனை விட்டு காதலி தயக்கமாய்ப் பிரிவது போல ஒரு பெரிய சைஸ் மேகத்திலிருந்த்து சின்ன மேகம் கலைந்து போகும். சிலசமயம் நண்பனோடு சண்டை போட்டு பிரிவது போல சின்ன மேகமொன்று சடாரென்று வேகமெடுத்து தனியாய்ப் பயணிக்கும். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நண்பன் முன்னால் நின்று ‘இரு.. இப்ப நீ என்ன சொல்ல வர்ற’
என்று கேட்பது போல, ஒரு மேகம் பிரிந்து வந்து கொஞ்சம் இடைவெளி விட்டு நின்று விடும். இப்படி நிறைய...

சிலர் சொல்வார்கள்.. உற்சாகம் குறைகிறதா.. கொஞ்ச நேரம் சும்மா இரு. அதுவும் நல்லதுதான். சும்மா இருத்தலே சுகம். எந்த சிந்தனையும் அற்று, எதுவும் செய்யாமல் சும்மா இருத்தல். (அதற்காக ஆஃபீஸில் மேலதிகாரி முன்னால் இப்படி உட்கார்ந்துவிட்டு மெமோ வாங்கினால் நான் பொறுப்பல்ல.)

பிடித்த புத்தகத்தை மேய்வதும் சிலருக்குப் பழக்கம். அதுவும் சிறந்ததே. நானும் அப்படிச் செய்வதுண்டு. ஆனால் அப்ப்டிப் பிடித்த புத்தகத்தை நாம் எப்போதும் நம் கையிலேவா வைத்திருக்க முடியும்?

**********************

இந்த வாரக் குமுதத்தில் வருங்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று ஒரு பகுதி வெளியிட்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப நாளாக குறிப்பிட்ட இரண்டு கண்டுபிடிப்புகள் வந்தால் பரவாயில்லை என்று தோன்றிக் கொண்டே இருக்கும்.

கொஞ்சம் அதீதக் கற்பனைதான்.... நடந்தாலும் நடக்கலாம் என்பதால் சொல்கிறேன்.

ஒன்று ரீடிங் ஸ்க்ரீன்.

நாம் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை நகலெடுத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு, நம் எதிரில் உள்ள சுவரில், அல்லது டேபிளில் அதை ஒளிவடிவில் பிரதிபலிக்கச் செய்து படித்துக் கொள்ளும் முறை. அந்த ஸ்டோரேஜ் 512 எம்.பி, ஒரு ஜி.பி என்று மாறலாம். இதனால் புத்தகத்தைத் தூக்கிச் செல்லும் சுமை கொஞ்சம் குறையும். ஆஃபீஸில் புத்தகங்கள் கொண்டு செல்ல முடிவதில்லை. ஆடியோ புக் அவ்வளவாகத் திருப்தி இல்லை. சில வரிகளில் நிறுத்தி நம் சிந்தனைகளை ஓடச் செய்ய அது சிரமமாக இருக்கிறது. (டாய்லெட்களில் புத்தகங்கள் வைப்பதில் உள்ள சிரமமும் குறைவு!) இரவு பஸ் பயணத்தின் போது லைட்டை அணைத்துவிடும்போதும் இந்த ரீடிங் ஸ்க்ரீன் தரும் ஒளியில் படித்துக் கொள்ளலாம் என்பதால் உபயோகமாக இருக்கும்.
.
இரண்டாவது ஹேண்ட்ஸ்ஃபோன்.

ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஃபோன் அல்ல! ஹேண்ட்ஸ் ஃபோன். அதாவது கையுறை போல ஒரு செல்ஃபோன். மெல்லிதான உறை. கையில் மாட்டிக் கொண்டால் அவ்வளவாக தெரியக் கூடாது. உள்ளங்கையில் நம்பர்கள். விரல்கள் இருக்குமிடத்தில் ஸ்க்ரீன். நடுவிரல் முனையில் ஸ்பீக்கர். மணிக்கட்டு பகுதியில் மைக். எல்லாமே மிக மெல்லிதாக வெளியில் தெரியாவண்ணம் இருக்கலாம். கையுறை வடிவமென்பதால் வேண்டாமென்றால் கழற்றிவைத்துக் கொள்ளலாம். இடதுகையில் மாட்டிக் கொண்டால் வலதுகையால் எண்களை அழுத்தி கையைக் காதில் வைத்தபடி பேசிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ‘ஃபோன் பேசு’ என்று சொன்னால் குழந்தைகள் தரும் ரியாக்‌ஷன் என்னவோ அதை மெய்ப்பிப்பது! செல்ஃபோன் என்ற சுமை குறையும்.

பாருங்கள்.. கொஞ்சம் இப்படி மூளையை க்ரியேடிவாக செலுத்தினால்கூட ரீசார்ஜ் ஆகிறது உற்சாகம்!

*****************************

நாட்டார் வழக்காற்றியலின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான அ.கா.பெருமாள் எழுதிய சுண்ணாம்பு கேட்ட இசக்கி என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமான, பல தகவல்களை அடக்கிய புத்தகம். கள ஆய்வுக்கு செல்லும்போது தான் சந்தித்த மனிதர்கள், சம்பவங்களை மிக இயல்பாக எழுதியிருக்கிறார். 30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறாராம். தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

நாட்டார் தெய்வங்கள் பற்றிய கதைகளும், போகிற போக்கில் சொல்லும் பழமொழிகளின் கதைகளும் புத்தகத்தை வைக்க முடியாமல் படிக்கச் செய்கிறது. நாளை முழுவதும் படித்துவிட்டு.. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் திங்களன்று.. (சந்தோஷமா கும்க்கி?)

************************