Friday, September 12, 2014

வரு-மானம்

நண்பனோடு அந்த உணவகத்தில் டின்னரில் இருந்தபோது, ரேடியோ போன்றொரு ஒலி கேட்டது.

‘நால்ரோடு சிக்னல் நால்ரோடு சிக்னல்’

நிமிர்ந்தால் வாக்கிடாக்கியுடன் ஒரு ட்ராஃபிக் போலிஸ்காரர் உள்ளே வந்தமர்ந்தார். கொஞ்சமே கொஞ்சம் அந்த வாக்கி டாக்கியின் சத்தத்தைக் குறைத்தார். வாஷ் பேசினில் போய்க் கைகழுவி வந்தவர், “ஏம்ப்பா டிஷ்யூ பேப்பர் இல்லையா?’ என்றார். நார்மலாக இந்த எழுத்து 12 ஃபாண்ட் சைஸ் என்றால், அவர் கேட்டதை ஃபாண்ட் சைஸ் 30ல் எழுதலாம் அவ்வளவு ச-த்-த-மா-க-க் கேட்டார்.

‘இல்லை சார்’ என்று மிகவும் தன்மையாக பதில் சொன்ன சர்வர், இடதுபுறச் சுவற்றைப் பார்த்தார். அங்கே டிஷ்யூ பேப்பர் உபயோகத்தால் அழியும் மரங்களைப் பற்றிய ஒரு சிறிய போஸ்டர் இருந்தது. போக்குவரத்து காவல்துறை நண்பர் அதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.

“என்ன இருக்கு?” என்றார். அதே 30 ஃபாண்ட் சைஸ் குரல்.

ஆர்டர் செய்துவிட்டு, வாக்கி டாக்கியின் சப்தத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, ஃபோனை எடுத்தார்.

“அப்பறம் மாப்ள? எங்க இருக்க?”

“..............................” - எதிர்முனையின் பேசியது - நல்லவேளை - கேட்கவில்லை.

“நான் இங்க சாப்டுட்டு இருக்கேன் மாப்ள. கல்யாணம் முடிஞ்சு விருந்துக்கெல்லாம் போகாமயே டூட்டீல ஜாய் பண்ணீட்ட போல?”

அவரது குரலுக்கு உணவருந்திக் கொண்டிருந்த எல்லாருமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் அதை சட்டை செய்ததாய்த் தெரியவே இல்லை.

சில நொடிகள் சம்பாஷணைக்குப் பிறகு, “அப்பறம்? இன்னைக்கு என்ன வசூல்?” என்றார் அதே சத்தமான குரலில்.

நான், திடுக்கிட்டு -  நிமிர்ந்து நேராய் அவரையே பார்த்தேன். அவர் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். தலை நிமிரவில்லை. அது தலைநிமிரக்கூடிய உரையாடலும் இல்லை.

“அவ்ளோதானா? இதை வெச்சுட்டு என்னய்யா பண்ணப்போற? கல்யாணத்துக்கே எப்டியும் செலவு ரெண்டு ரெண்டரை ஆகிருக்காது? டெய்லியும் வெறும் 500, 600தான்னா என்ன பண்ணுவ?”

இதற்கு எதிர்முனை, ‘உனக்கு?’ என்று கேட்டிருக்கவேண்டும் என்பது இவரது பதிலில் தெரிந்தது.

“ப்ச்..  இங்க அதவிட மோசம் மாப்ள. காலைல இருந்து ஒண்ணும் சிக்காம, சாயந்தரம் ஒரே ஒரு மணல் லாரிக்காரான் வந்தான். வெறும் 400 ரூவாதான் கறக்க முடிஞ்சது. கடுப்பாய்டுச்சு மாப்ள இன்னைக்கு”

பொது இடத்தில், நான்கைந்து பேர் அங்கங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவகத்தில் லஞ்சப் பரிமாற்றம் குறித்து வெளிப்படையாய், இத்தனை சத்தமாய்ப் பேசிக் கொள்வது குறித்த கவலை கிஞ்சித்தும் அவருக்கு இருக்கவில்லை. அதை ஏதோ ‘இன்னைக்கு எங்க பாஸ் என்னைப் பாராட்டினார்’ என்று ஊழியர்கள் செய்தி பரிமாறிக் கொள்வதைப் போல, பெருமையாய்ப் பகிர்ந்து கொள்கிறார்.

எனக்கு அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நண்பனிடம் புலம்பிக் கொண்டே, அவசர அவசரமாய் அந்த இடம் விட்டு நகர்ந்தேன். கை கழுவிட்டு, பில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அதிகபட்சமாய் அந்தக் காவல்துறை நண்பரைக் கடக்கும்போது அவரை முறைக்க மட்டுமே முடிந்தது. அதுவும் அவர் பார்க்கவில்லை என்றதால் இருக்கலாம்.

வெளியே வந்து பைக் எடுக்க நிற்கையில் நண்பன் சொன்னான். “அவனுக்கே அக்கறை இல்லை, பயம் இல்லை. நீ ஏன் இவ்ளோ டென்ஷனாகற?”

“இல்ல பாஸ். முப்பது வயசுக்குள்ளதான் இருக்கும். இத்தனை பேர் கவனிக்கறாங்கன்னுகூட தெரியாதா? பொது இடத்துல பெருமையா பேசற விஷயமா இது?”

“தைரியமா பேசறான்னா அவ்ளோ லஞ்சம் குடுத்துதான் அவனும் வேலை வாங்கீருப்பான். அத அடைக்கணும்ல?”

‘அது சரி” என்ற நான் ஒரு நிமிஷம் நின்றேன். போனமுறை இதைப்போன்ற ஷாப்பிங் மால் விவகாரம் ஒன்றைப் பகிர்ந்தபோது, நண்பர்கள் ‘நானா இருந்தா சும்மா வந்திருக்க மாட்டேன். நாலு கேள்வி கேட்டுட்டுதான் வந்திருப்பேன்’ என்றெல்லாம் உசுப்பேற்றியது ஞாபகம் வந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, ‘ப்ச்’ என்று பைக்கை எடுக்கப் போனேன்.

திடீரென்று ஒன்றை கவனித்து, “இரு வர்றேன்” என்று நண்பனிடம் சொல்லிவிட்டு, நேராக அந்த போலீஸ்காரரை நோக்கி சென்றேன்.

சாப்பிட்டு முடித்திருந்த அவர் என்னைப் பார்த்ததும் “என்ன?” என்பதாய் புருவமுயர்த்தினார்.

“உங்க பைக்கை, க்ராஸா நிறுத்திருக்கீங்க. என் பைக்கை எடுக்க முடியல. கொஞ்சம் வர்றீங்களா?” என்றேன். இப்போது என் குரல் சாதாரணத்தை விட கொஞ்சம் கடுமையாய், உயர்ந்திருந்தது.

“சைடுல தள்ளி வெச்சுட்டு எடுத்துப் போங்க பாஸ்”

“இல்லைங்க.. சைடு லாக் பண்ணீருக்கு. நீங்களே வந்து எடுங்க” என்றேன்.

அவர் மிகுந்த சலிப்புடனே எழுந்து வெளியே வந்தார். Anti Snatching Squad என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த தன் பைக்கை சைட் லாக் விடுவித்து நகர்த்தினார்.


அப்போது நான் என் பைக்கை எடுத்தவாறே, என் நண்பனைப் பார்த்து சொன்னேன்.

“நான் சொன்னேன்ல.. ? இவருதான் பாஸ்”

என் நண்பன் குழப்பமாய்ப் பார்க்க, அந்த போலீஸ்காரரும் என்னைப் பார்த்தார்.

“ஒண்ணும் இல்ல சார்.. வெறும் நானூறுதான் வருமானம் வந்துச்சுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல.. அதைப் பத்திதான் பேசிட்டிருந்தோம் சார்.. வர்ட்டுங்களா?” என்று பைக்கை உதைத்து விரட்டினேன்.

இன்றைக்கிலிருந்து அவர் திருந்துவாரா என்று தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர் வாங்கும் லஞ்சப்பணத்தை பொது இடங்களில் இவ்வளவு சத்தமாய்ப் பகிர்ந்துகொள்ள மாட்டாரென்பது மட்டும் நிச்சயம்.
.

6 comments:

Unknown said...

அருமை அண்ணே

Anonymous said...

தலை நிமிரவில்லை. அது தலைநிமிரக்கூடிய உரையாடலும் இல்லை. - Nice sentence :-)

Harry Gowtham said...

ம்ம்ம் மால் விவகாரம் மாதிரி சும்மா இல்லாம ஏதோனு சொல்லிட்டு வந்திங்களே சூப்பர் !!

ஒன்னும் தெரியாதவன் said...

தல போலீஸ்காரன் லஞ்சம் வாங்குரான்னா அதுக்கு காரணம் நம்ம பொறுப்பில்லத தனமும், சோம்பேறித் தனமும், கஞ்ச தனமும் தான் காரணம்

KSGOA said...

ம்ம்ம்.....எது எப்படியோ மீண்டும் தொடர்ந்து எழுத ஆரம்பித்து இருக்கிறீர்கள்...தொடருங்கள்...

Unknown said...

Super jee