Sunday, September 7, 2014

கேள்வி கேட்டா தப்பா சார்?

வரிசையில் நான் முதல் ஆள். Counter Opening Time: 8.45 AM என்றிருந்தது. நான் வாட்சைப் பார்த்தேன். 9.01 என்று காட்டியது. கொஞ்சம் தள்ளி, சலவைக்கல் பெஞ்ச்சில் உமாவும், மகள்களும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

அது கோவையின் ஒரு Shopping Mall. ‘8.45க்கு டிக்கெட் வாங்கிட்டு, மால் ரெஸ்டாரண்ட்ல சாப்ட்டு, 9.30 ஷோ பார்க்கலாம்’ என்பது எங்கள் திட்டம்.

என் வாட்ச், ‘9..02’ என்றபோது சாவகாசமாக அரட்டை அடித்தபடி மூன்று பேர் கவுண்டர் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். உள்ளிருந்த, ஸ்க்ரீன் உயர்த்தப்படவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்ததும், நான்கைந்து கவுண்டர்கள் முன்னிலும் அங்கங்கே அமர்ந்திருந்தவர்கள் வந்து ஆக்ரமித்துக் கொண்டனர்.

9.03

9.04

9.05

9.06

இப்போது மாலின்,  பணிப்பெண் ஒருத்தி சீருடையில் அந்த கவுண்டர் கதவைத் திறந்து, ஒரு கையில் கதவைப் பிடித்தவாறே உள்ளிருந்த ஒருத்தியிடம் 500 ரூவாய்த் தாளை நீட்டி டிக்கெட் கேட்டார். உள்ளிருந்த பெண்ணும் ஜாலியாக சிரித்துக் கொண்டு, ஏதோ அரட்டை அடித்தபடியே அவளுக்கு முதல் டிக்கெட்டை வழங்க ஆயத்தமானார்.

வழக்கம்போல என்னுள் இருந்த அம்பி விழித்துக் கொள்ள, “ஏங்க 8.45 கவுண்டர் ஓபன்னு போட்டிருக்கு. டிக்கெட் வாங்கிட்டு சாப்டுட்டு படம் பார்க்கலாம்னு வந்தா, 9.10 ஆகப்போவுது.. இன்னும் டிக்கெட் இஷ்யூ ஆரம்பிக்காம இருக்கீங்களே?’ என்றேன்.

நான் சொன்னது உள்ளிருந்தவர்களுக்குக் கேட்க வாய்ப்பில்லை. பாதிக் கதவை திறந்தபடி நின்றிருந்த பெண் நான் சொன்னதை உள்ளே வழிமொழிந்தார்:

”எட்டே முக்கால்ன்னு போட்டு, எட்டேமுக்காலுக்குத் தொறக்கலியாம். இப்டி லேட் பண்ணினா எப்டி டிஃபன் சாப்டு படம் பார்க்கறதுன்னு கேட்கறாரு” என்றார், கொஞ்சம் அதிகபட்ச டெசிபலில்.

அதற்கு உள்ளிருந்து ஏதோ கமெண்ட் வர சட்டென்ற ஒரு பயங்கரச் சிரிப்பு அவர்களுக்குள்ளே பரவியது.

‘என்ன சொன்னாங்க?’ என்று கேட்டேன் சற்றே கோபமுற்ற நான்.

“அவங்க என்கிட்ட சொன்னாங்க”

“நான் சொன்னத உள்ள சொன்னீங்கள்ல? அவங்க என்ன சொன்னாங்கன்னு எங்கிட்டயும் சொல்லுங்க”


“அவங்க என்கிட்டதான் சொன்னாங்கன்னு சொல்றேன்ல?”

இதற்குள் உள்ளே இருந்த பெண், ‘ஏய்.. உள்ள வந்து கதவைச் சாத்துடி. இப்டி பாதிக் கதவை தொறந்து நின்னு பேசாத’ என்று அதட்ட அந்தப் பெண்ணும் உள்ளே சென்றார்.

ஓரிரு நிமிடங்களில் கண்ணாடியைத் தடுத்திருந்த திரை உயர்த்தப்பட, என் முன்னே இருந்த கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் பெண்ணும், அவருடன் வெளியிலிருந்து வந்த பெண்ணும் நின்றிருந்தனர். என்னைப் பார்த்ததும், அந்தப் பெண், டிக்கெட் வழங்கும் பெண்ணிடம் ஏதோ சொல்ல, டக்கென்று அவர் சீட் மாறி வேறு கவுண்டரில் சென்றமர்ந்தார். இப்போது நான் நின்றிருந்த கவுண்டரில் டிக்கெட் வழங்க யாருமில்லை.

நான் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். மாலின் ஊழியப் பெண் வெளியே வந்து என்னை அவசரமாய்க் கடந்து சென்று விட, மற்ற டிக்கெட் கவுண்டர் வழியே ஆளாளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஏதுமறியாத என் மகள் மீரா என்னிடம் வந்து, ‘என்னாச்சுப்பா.. ஃபோன் குடுங்க நான் அந்தக் கவுண்டர்ல நின்னு வாங்கிடறேன்’ என்று என் ஃபோனை வாங்கி இன்னொரு வரிசையில் நின்றாள். இதையெல்லாம் முகத்தில் வெற்றிக் களையுடன் டிக்கெட் கொடுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.

நுழைவுச் சீட்டு கிடைத்ததும், நேராக மேலே திரையரங்குக்குப் போனோம். லிஃப்ட் கதவு திறக்கப்பட்டதும், அங்கிருந்த வரிசையில் போய் நின்றோம். 20 பேர்கள் இருந்த வரிசை, என் முன்னே நான்கைந்து பேராக குறைந்ததும் கவனித்தேன். கீழே 500 ரூபாயைக் கொண்டு வந்து டிக்கெட் வாங்கிய பெண் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், அவர் அருகே நின்று கைப்பயைச் சோதித்துக் கொண்டிருந்தவரிடம் ஏதோ சொல்ல, அந்த அம்மணி என் முன் நின்றவர்களை விடுத்து, நேராக என்னைப் பார்த்தார்.

‘நான் சொன்னேன்ல.. இவன்தான் கீழ ரூல்ஸ் பேசினது’ – இதாகத்தான் இருக்க வேண்டும் என்பது உ.கை.நெ.கனி.

எனக்கு மீண்டும் ஒரு மாதிரி அவமான உணர்வு மேலிட, அவர்கள் அருகே சென்றதும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன்:

“ஜெயிச்சாச்சா? நான் நியாயமாக் கேட்ட கேள்விய உள்ள கிண்டலா சொல்லி, அந்தம்மாவை சீட் மாறி உட்கார வெச்சு எனக்கு லேட்டா டிக்கெட் கெடைக்க வெச்சதுல ஒரு சந்தோஷம் உங்களுக்கு.. இங்க இவங்ககிட்ட என்னைப் பத்தி கமெண்ட் பண்றதுல ஒரு சந்தோஷம். இப்ப நல்லா ஃபீல் பண்றீங்கள்ல?”

இதைக் கேட்டதும் சற்றுத் தள்ளி இருந்த சஃபாரி ஆசாமி வந்தார்.

”என்னம்மா ப்ரச்னை?’

“தெரியல சார். கீழயும் இப்டித்தான் ஏதோ கேட்டு ப்ரச்னை பண்ணாரு”

“என்ன சார் வேணும்?”

“கஸ்டமர் கேர்தான் சார் வேணும். வேறென்ன வேணும்? 50, 60 ரூவா டிக்கெட்டை விட்டு 120 ரூவா டிக்கெட் குடுத்து வர்றோம்னா, சொன்ன டயத்துக்கு எல்லாம் நடக்கும்னுதானே வர்றோம்? 8.45க்கு போட்டுட்ட்டு 9.10 வரைக்கும் கவுண்டர் திறக்கல. அதக் கேட்டதுக்குத்தான் இத்தனையும்....”

இதற்குள் உமாவும் மகள்களும், ‘வாங்க போலாம்’ என்றழைக்க, நானும் நகர்ந்தேன்.

இடைவேளையில் நடந்தவற்றை என் மகள்களிடம் பகிர்ந்து கொண்டேன். படம் முடிந்ததும், ‘வெளில போறப்ப அந்தப் பொண்ணைப் பார்த்து மறுபடி கேட்கலாமாப்பா?’ என்றாள் மீரா. ‘வெளில போற வழி வேற.. அதுனால அவங்களைப் பார்க்கப் போறதில்ல” என்றேன்.

ஆனால், சாப்பிட்டு விட்டு வேறு வழியாக எஸ்கலேட்டரில் இறங்க, கீழே அந்தப் பணிப்பெண் நின்று கொண்டிருந்தார்.

“ப்பா.. அந்தக்கா நிக்குது. ஏதும் கேட்கப் போறீங்களா?’

”இல்ல குட்டீம்மா. அவங்க கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்ப்பாங்கன்னு நினைக்கறேன்” என்றேன்.

கீழே இறங்கி, அவரைக் கடக்க எத்தனிக்கையில் என்னைத் தடுத்து, “ஸாரி சார்.. நான் பண்ணது தப்புதான். ஃபேமலியோட, ஒரு லீவு நாளைக்கு வந்த உங்க மூடை ஸ்பாய்ல் பண்ணீட்டேன். மேனேஜர்ட்ட சொல்லி, கரெக்ட் டைமுக்கு கவுண்டர் திறக்க வைக்கறேன்” என்று சொல்வாரென்று நினைத்தேன். ம்ஹும். முன்னைவிடக் கடுமையாக முறைத்துவிட்டுக் கடந்தார்.


அடுத்தமுறை அங்கு செல்கையில், இந்தச் சம்பவம் மறந்து - அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்கும் மனோபாவம் எனக்கு வாய்க்கவேண்டும். பார்ப்போம்!
.

6 comments:

ஒன்னும் தெரியாதவன் said...

தல உங்க அம்பிய உங்க காமன் மேன் தோற்கடிச்சிட்டான்

Unknown said...

அவங்க தான் ஈGOவுல ஜெயிச்சுட்டாங்களே ;)

♫கலாபன்... said...

இதே சூழல் வேற மாதிரி எனக்கும் நடந்திருக்கிறது. ஆனால், அமைதியாக வரமுடியவில்லை, குறைந்தபட்சம் சப்தம்போட்டுவிட்டுதான் வரமுடிகிறது

கௌதமன் said...

சாந்தமு லேக சௌக்கியமு லேது!

Harry Gowtham said...

போங்க மாம்ஸ் படிக்கவே கடுப்பா இருக்கு சும்மாவ விட்டிங்க அந்த பெண்ன அட்லீஸ்ட் மேனேஜர கூபிட்டவது அல்லது ஹெட் ஆபீஸ்க்கு மெயில் பண்ணிருக்கலாம் வர வர உங்க அமைதிக்கு அளவுயில்லாம போச்சு

எனக்கு அந்த மாதிரி யாரும் சிக்க மாட்டிரங்க ..:-(

KING HOPES said...

Idhuku ambi ellam waste...Anniyan ah thaan correct.