Showing posts with label Cat. Show all posts
Showing posts with label Cat. Show all posts

Thursday, January 1, 2009

அட! (ஜனவரி 01 - 2009)


யானையா நாயா நீங்க-ன்னு கேட்டா… யானை-ன்னுதான் சொல்ல வரும். அது என்னமோ நாய்ன்னா கீழானதுன்ன ஒரு மனோபாவம் நமக்குள்ள. ஆனா நன்றியோட இருக்கறதுல நாய்தான் பெஸ்ட்ங்கறது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்ல? பழகினவர்கிட்ட நட்பு பாராட்டறதுலயும் நாயைப் போல சிறந்ததில்லை.

பாகனைக் கொன்ற யானையோட எத்தனை சம்பவங்களை நாம பார்த்திருக்கோம்? ஆனா நாய் தன்னோட எஜமானோட பழகறவனைக் கூட ஒண்ணும் பண்ணாது. அந்தளவு நட்புக்கும், பழகறதுக்கும் முக்கியத்துவம் குடுக்கும் நாய்!


நட்பாராய்தல்ங்கற அதிகாரத்துல (203) நாலடியார் இதத்தான் சொல்றாரு...
யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்ஐ கெழீஇக் கொளல்வேண்டும்-யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லு மெறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கு நாய்

அதாவது எத்தனை நாள் பழகியிருந்தாலும் தனக்கு ஒரு சின்ன குற்றம் செஞ்சுட்டா கோவம் வந்து பாகனைக் கொன்றுடுமாம் யானை. ஆனா நாய் தன்னோடு பழகினவன் வீசின வாள் உடம்பில தைத்திருக்கும்போது கூட நன்றியோட வாலை ஆட்டிகிட்டு இருக்குமாம்!

இதைப் படிக்கும்போது எனக்கு இன்னொண்ணும் ஞாபகம் வந்தது. யாரோ சொன்னது... மிருகங்களின் சைக்காலஜிப்படி இத ஆராய்ஞ்சு கண்டுபிடிச்சாங்களாம்.. அதாவது நாய்க்கு நாம சோறு வைக்கறப்ப ‘அட.. என்னையும் மதிச்சு சாப்பாடு போடறாரே.. மனுஷன் எவ்ளோ உயர்ந்தவன்’ன்னு நெனைச்சுக்குமாம் நாய். ஆனா பூனைக்கு நாம சோறு வைக்கறப்ப ‘ஒரு மனுஷன் வந்து எனக்கு சோறு வைக்கறான்னா, நான் மனுஷனைவிட எவ்ளோ உயர்ந்தவனா இருக்கணும்’ன்னு கர்வத்தோடதான் சாப்பிடுமாம்! உண்மையான்னு தெரியல. டாக்டர்.ருத்ரன் சார் இதப் படிச்சார்ன்னா விளக்கம் சொல்வாருன்னு நெனைக்கறேன்!

************************************

குரங்கைப் பிடிக்கறவங்க எப்படிப் பிடிப்பாங்கன்னு தெரியுமா? சதுர வடிவிலான மரப்பெட்டியை குரங்குகள் வர்ற பகுதிகள்ல நிலத்துல, மரத்துல பதிச்சு வெச்சிருப்பாங்க. இழுத்தா எடுக்கமுடியாத மாதிரி. அதுல மேல்பகுதில குரங்கோட கை நுழையற அளவு ஒரு ஓட்டை இருக்கும். அதுக்குள்ள குரங்குகள் சாப்பிடற சில பழக்கொட்டைகள் இருக்கும்.

அந்தப் பக்கமா வர்ற குரங்குகள் வாசனையால கவரப் பட்டு, அதுக்குள்ள கைவிட்டு நாலைஞ்சு கொட்டைகளை எடுத்து, கையை வெளில எடுக்க முயற்சி பண்ணும். வெறும் கை நுழையற அளவுதான் அந்த ஓட்டை இருக்கும். பழக்கொட்டைகள் கைல இருக்கறப்ப அந்தக் கை ஓட்டையை விட்டு வெளில வராது. அதை விட்டுட்டா வெளில கையை எடுத்துடலாம்ன்னு யோசனை இல்லாம அப்படியே தவிச்சிட்டிருக்கும். அப்போ வேடர்கள் சாவகாசமா வந்து குரங்கை சங்கிலியால கட்டி, அந்த மரப்பெட்டியை பேர்த்து எடுத்து, குரங்கைப் பிடிச்சுட்டு போய்டுவாங்களாம்!

நாமளும் இப்படித்தான் சில விஷயங்கள்ல பிடிவாதமா இருந்து, அந்தப் பிடிவாதத்தை விட்டுட்டா ஜெயிக்கலாம்ன்னு தெரியாம தவிக்கறோம்.

*

இந்தப் புத்தாண்டு எல்லாருக்கும், உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த ஆண்டாக வாழ்த்துக்கள்!

*